கேரளாவில் பறவைக் காய்ச்சல்: பீதியில் நாமக்கல் கோழிப்பண்ணை உரிமையாளர்கள்
நாமக்கல்: கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி உள்ளதால் நாமக்கல் மாவட்ட கோழிப் பண்ணை உரிமையாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள குட்டநாடு, புன்னமடா, சம்பக்குளம், நெடுமுடி, புறக்காடு மற்றம் பகவதிபாடத்தில் உள்ள வாத்துப்பண்ணைகளில் கடந்த சில நாட்களில் 20 ஆயிரம் வாத்துக்கள் இறந்தன. இதையடுத்து இறந்த வாத்துக்களின் ரத்த மாதிரிகள் போபாலில் உள்ள மத்திய வைரஸ் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வில் வாத்துக்கள் ஏவியன் இன்ப்ளுயன்சா வைரஸ் தாக்கி அதாவது பறவை காய்ச்சலில் இறந்தது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து 2 லட்சம் வாத்துக்களை அழிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் கேரளாவில் பறவை காய்ச்சல் பரவுவதை நினைத்து நாமக்கல் மாவட்ட கோழிப்பண்ணை உரிமையாளர்கள் பீதி அடைந்துள்ளனர்.
நாமக்கல்லில் உள்ள கோழிப் பண்ணைகளில் 4 கோடி முட்டையிடும் இன கோழிகள் வளர்க்கப்படுகிறது. அங்கு தினமும் 3 கோடி முட்டைகள் உற்பத்தியாகிறது. இதில் 90 லட்சம் முட்டை தினமும் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் பறவைக் காய்ச்சலால் முட்டைகளை அனுப்ப முடியாவிட்டால் தினமும் 90 லட்சம் முட்டைகள் தேங்கும் நிலை ஏற்படும்.
இந்நிலையில் நாமக்கல் கலெக்டர் தட்சிணாமூர்த்தி தலைமையில் கால்நடை மருத்துவர்கள், கோழிப் பண்ணை உரிமையாளர்கள் கலந்து கொண்ட அவசர கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் கூறுகையில்,
கேரளாவில் பறவைக் காய்ச்சலால் வாத்துக்கள் இறந்துள்ளன. கோழிப்பண்ணைகள் அதிகம் உள்ள நம் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மருத்துவர்களும், பண்ணை ஆட்களும் எடுக்க வேண்டும்.
கோழிப் பண்ணைகளை கண்காணிப்பதற்காக 20 மருத்துவ தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பண்ணைகளுக்குள் வெளியாட்களை விடக் கூடாது. பண்ணைகளுக்கு வரும் வாகனங்களின் டயர்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும். தேங்கிய கழிவுநீரை அகற்ற வேண்டும். முட்டை அட்டைகளில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். திடீர் என ஏராளமான கோழிகள் இறந்தால் உடனே தகவல் அளிக்க வேண்டும் என்றார்.
உம்மன் சாண்டி:
கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதை அடுத்து அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி தலைமையில் செவ்வாய்க்கிழமை அவசர கூட்டம் நடைபெற்றது. இறந்த வாத்துக்களை உடனே எரிப்பது, ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள 2 லட்சம் வாத்துக்களை உடனே கொல்வது, உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மேலும் ஆலப்புழா மாவட்டத்தில் இருந்து வாத்துக்கறி, முட்டைகளை பிற பகுதிகளுக்கு அனுப்ப தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையே கோட்டயம் குமாரகத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் இருக்கும் கோழிகளுக்கு பறவை காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாதுகாப்பு கருதி அப்பகுதியில் உள்ள பறவைகள் சரணாலயம் மூடபப்பட்டுள்ளது.