கேரளாவில் பறவைக் காய்ச்சல்: பீதியில் கோழிக்கறி சாப்பிடாத தமிழக மக்கள்- விலை சரிவு
சென்னை: கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோழிக்கறி விற்பனை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதால் விலையும் குறைந்துள்ளது.
கேரளாவில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழகத்தில் கோழிப்பண்ணைகள் வைத்திருப்போர் பீதி அடைந்துள்ளனர். மேலும் தமிழக மக்கள் கோழிக்கறி சாப்பிட அஞ்சுகிறார்கள். இதனால் கோழிக்கறி விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. விளைவு கோழிக்கறியின் விலை வெகுவாக குறைந்துள்ளது.
சென்னையில் ரூ.160க்கு விற்பனையான ஒரு கிலோ கோழிக்கறியின் விலை ரூ.40 குறைந்து ரூ.120க்கு விற்பனையாகிறது. ரூ.110க்கு விற்கப்பட்ட உயிருள்ள கோழி தற்போது ரூ. 90க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்து மொத்தவியாபார டீலர்கள் அசோசியேஷனை சேர்ந்த ஒருவர் கூறுகையில்,
பறவைக் காய்ச்சல் காரணமாக கேரளாவுக்கு கோழிகள் அனுப்பி வைக்கப்படுவது அங்கிருந்து இங்கு வருவது நின்றுவிட்டது. இதனால் நாமக்கல், பல்லடத்தில் கோழிகள் குவிந்து கிடக்கின்றன. அவற்றை தமிழகத்திலேயே விற்பனை செய்து வருகிறார்கள். மக்களும் கோழிக்கறி சாப்பிட அஞ்சுவதால் விற்பனை குறைந்துள்ளது. அதனால் விலையும் குறைந்துவிட்டது என்றார்.
மதுரையில் கோழிக்கறி வாங்குவோரின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது. ஹோட்டல்களில் கூட கோழிக்கறி வாங்குவதை குறைத்துவிட்டனர். மதுரை தவிர கோவை, ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களிலும் கோழிக்கறி விலை குறைந்துள்ளது.
கோழிக்கறி வாங்குவோர் எண்ணிக்கை குறைந்தபோதிலும் ஆட்டுக்கறி, மீன் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் ஆட்டுக்கறி, மீன் ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது.