பறவைகள் கடத்தல்: 4 பெண்கள் கைது... ஏராளமான பச்சைக் கிளிகள், குருவிகள் மீட்பு
திருச்சி: திருச்சியில் பறவைகளை கடத்த முயன்ற 4 பெண்களை வனத்துறையினர் கைது செய்தனர்.
திருச்சியில் பறவைகளை சிலர் சட்டவிரோதமாக பதுக்கி, கடத்துவதாக வனத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வனத்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சென்னைக்கு சிலர் பறவைகளைக் கடத்த முயன்றது தெரியவந்தது.
நேற்று காலை வனத் துறையினர் அங்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது பாலக்கரை குருவிக்காரத் தெருவைச் சேர்ந்த சண்முகம் மனைவி ஐயம்மாள்(46), குஞ்சுப்பிள்ளை மனைவி ராஜாமணி (71), வீரப்பன் மனைவி ராஜேஸ்வரி (61), பாலகிருஷ்ணன் மனைவி பவுனம்மாள் (75) ஆகியோர் பறவைகளை கூண்டுக்குள் அடைத்து கடத்த முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை கைது செய்த வனத்துறையினர், அவர்களிடம் இருந்து 160 பச்சை கிளிகள், 300 குருவிகளை மீட்டனர். கைதுசெய்யப்பட்டவர்கள் நீதிமன்றனத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டனர்.