நெல்லையில் ஜனவரி 24ல் பறவைகள் கணக்கெடுப்பு துவக்கம்
நெல்லை: நெல்லை, தூத்துககுடி மாவட்டங்களில் தாமிரபரணி நீர்நிலை வாழ் பறவைகள் கணக்கெடுப்பு வரும் ஜனவரி 24ம் தொடங்குகிறது.
தாமிரபரணி ஆறு மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தின் வழியாக ஓடி புன்னகாயல் கடலில் கலக்கிறது. வற்றாத ஜீவநதியான தாமிரபரணி மற்றும் அதன் பாசன குளங்கள் பறவைகளின் வாழ்விடமாக இருநது வருகிறது. ஆற்றில் கிடைக்கும் மீன்கள் பறவைகளின் உணவாக இருந்து வருகிறது.
ஆற்றின் தண்ணீரை சுற்றியுள்ள மரங்கள் பறவைகளின் உறைவிடமாக இருந்து வருகிறது. தாமிரபரணி பாசன குளங்கள் 90 வகையான நீர்நிலை வாழ் பறவைகளுக்கு வாழ்வளிக்கிறது. பெரும்பாலான பறவைகள் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து இடம் பெயர்ந்து வருபவை.
நெல்லை மாவட்டத்தல் கூந்தன்குளம் பறவைகள் சராணலயம், திருப்புடை மருதூர் பறவைகள் காப்பகம், வாகைகுளம், பொன்னக்குடி போன்ற குளங்கள் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள கடம்பாகுளம், பெருங்குளம், கருங்குளம், ஆறுமுகமங்கலம், போன்ற குளங்கள் எண்ணற்ற பறவைகளுக்கு குளிர்காலத்தில் உறைவிடமாக இருந்து வருகிறது.
இந்த காலத்தில் கூட்டம் கூட்டமாக வரும் பறவைகள் பொதுமக்களுககு வெகுவாக காட்சியளிக்கும். ஆனால் இவற்றின் முக்கியத்துவம் தெரியாமல் நீர்நிலைகள் மற்றும் பறவைகளுக்கு ஆப்த்து ஏற்படுகின்றன. இதை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் நீர்நிலைகளில் வாழும் பறவைகளின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு நடந்த கணக்கெடுப்பில் மாணவர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், விவசாயிகள் என 60க்கும் மேற்பட்ட பறவை ஆர்வலர்கள் பங்கேற்றனர். 58 குளங்களில் நடந்தப்பட்ட கணக்கெடுப்பில் 67 ஆயிரம் பறவைகள் இருப்பது தெரிய வந்தது.
இந்த ஆண்டும் மணிமுத்தாறை சேர்ந்த அகத்தியமலை சமுதாயம் சார்ந்த இயற்கை வன பாதுகாப்பு மையம், நெல்லை மண்டல வனத்துறை, இயற்கை சங்கம் ஆகியவை இணைந்து இந்த பறவைகள் கணக்கெடுப்பை ஜனவரி 24ம் தேதி துவங்கி 26ம் தேதி வரை நடத்துகின்றன.