கமகமக்கும் புழல் ஜெயில் பிரியாணி.. லெக் பீஸ்களும் பிரமாதம்.. பரபரக்கும் வீடியோ!
புழல் சிறையில் கைதிகள் பிரியாணி தயாரிக்கும் வீடியோ வைரலாகிறது.
சென்னை: புழல் சிறைச்சாலையில் கைதிகள் பிரியாணி சமைப்பது போன்ற வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
ஆசியாவிலேயே மிகப்பெரிய சிறை என பெயர் பெற்ற புழல் ஜெயிலானது கடந்த சில நாட்களாகவே சிக்கலில் விழுந்து வருகிறது.
சிறையில் தண்டனை கைதிகள் சொர்க்கபுரி போன்று வாழ்ந்த ஒரு வாழ்க்கையை புகைப்படங்களாக வெளியிட்டனர். இதனால் சிறைச்சாலையில் உல்லாத வாழ்க்கை புகைப்படங்கள் வைரலாகி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதனை தொடர்ந்து சிறைக்கள் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன.
அண்டா, குண்டாக்கள்
அப்போது, சிறை அறைகளில் மெத்தை, டிவி, செல்போன், அண்டா, குண்டா என அனைத்துமே இருந்தது கண்டறியப்பட்டு அவை பறிமுதலும் செய்யப்பட்டன. இதனையடுத்து சிறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம், ஆய்வுகள் என தொடர்ச்சியாக அதிரடிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதிக விலைக்கு பிரியாணி
இந்நிலையில், புழல் சிறையில் பிரியாணி தயாராகும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. கைதிகளின் அறையிலேயே இந்த பிரியாணி தயாரிக்கப்படுகிறது. அந்த அறையில் தொலைக்காட்சி, டைனிங் டேபிள் உள்ளிட்ட வசதிகள் இருப்பதும் வீடியோ மூலம் அப்பட்டமாக தெரியவந்துள்ளது. சிறைக்குள் தயாராகும் இந்த பிரியாணி கைதிகளுக்கு அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
5 முறை சோதனைகள்
இந்த வீடியோ வைரலாவது ஒருபக்கம் என்றால், மற்றொரு பக்கம் இன்னொரு சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த 29-ம் தேதி, புழல் சிறையில் 5 முறை சோதனைகள் நடத்தப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 40-க்கும் மேற்பட்ட டிவி.க்கள், ரேடியோக்கள் உள்ளிட்ட நிறைய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு விட்டதாகவும் சிறைதுறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அடாவடி, அட்டூழியங்கள்
ஆனால் தற்போது வெளியாகி உள்ள இந்த வீடியோ சோதனைக்குப் பிறகு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மற்றொரு புறம் இந்த வீடியோ ஒன்றரை வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள். எப்படி இருந்தாலும் சிறை வளாகத்தில் இதுபோன்ற அடாவடி, அட்டூழியங்களை செய்யும் நபர்கள், அதிகாரிகள் மீது சிறைத்துறையின் உயர் அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.