காங்கிரஸை திமுக கூட்டணியில் இருந்து வெளியேற்ற வியூகம் வகுக்கும் பாஜக.. பரபர தகவல்கள்
காங்கிரஸை திமுக கூட்டணியில் இருந்து வெளியேற்ற வியூகம் வகுத்திருக்கிறது பாஜக.
Recommended Video
சென்னை: திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸை வெளியேற்றும் முயற்சிகளை படுதீவிரமாக பாஜக மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இருந்து வருகிறது. தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக திருநாவுக்கரசர் பொறுப்பேற்றது முதல் திமுகவுடன் மோதல் போக்கைத்தான் கடைபிடித்து வருகிறார்.
இது திமுகவில் ஸ்டாலின் தரப்பை மிகவும் அதிருப்தி அடைய வைத்திருக்கிறது. இருந்தபோதும் இன்னமும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிப்பதாகவே காட்டிக் கொள்ளப்படுகிறது.
பாஜகவுக்கு சாதகம்?
இதனிடையே தேசிய அளவில் பாஜக, காங்கிரஸுக்கு எதிரான கூட்டணி குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. இந்த கூட்டணி அமைந்தால் பாஜகவுக்கு சாதகம் என கூறி வருகின்றனர் இடதுசாரிகள். இந்த நிலையில் எந்த சூழலிலும் காங்கிரஸ் தலைமையில் மத்தியில் ஒரு ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்பதில் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறதாம் பாஜக. கடந்த லோக்சபா தேர்தலில் 44 இடங்களைத்தான் காங்கிரஸால் பெற முடிந்தது.
லோக்சபா தேர்தலில் நிலைமை மாறும்
ஆனால் வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி, கூட்டணி உதவியுடன் நிச்சயம் கடந்த முறை போல அல்லாமல் கூடுதல் இடங்களைப் பெற வாய்ப்புள்ளது. அதேபோல பாஜகவும் நிச்சயம் கடந்த முறையைப் போல 282 இடங்கள் கிடைக்காது; தனிப்பெரும்பான்மையாக வர முடியாது என்பதையும் உணர்ந்திருக்கிறது.
காங்கிரஸை தனிமைப்படுத்துதல்
இதனால் காங்கிரஸுக்கான வாய்ப்புகள் அனைத்தையும் அடைத்துவிட வேண்டும் என்கிற அஜெண்டாவையும் பாஜக கையில் எடுத்துள்ளது. முதல் கட்டமாக தமிழகத்தில் காங்கிரஸை பலவீனப்படுத்தும் வேலைகளைத் தொடங்கியுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றால் நிச்சயம் அக்கட்சிக்கு ஆதாயம் கிடைக்கும். திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேற்றப்பட்டால் ஒரு சீட் கூட கிடைக்காது என்கிற யதார்த்ததின் அடிப்படையில் பாஜக காய்நகர்த்தி வருகிறது.
பாஜக பிரமுகர் திமுக தரப்பு சந்திப்பு
பாஜக மேலிடத்தால் களமிறக்கப்பட்ட வெளிமாநிலத்தைச் சேர்ந்த பிரமுகர் திமுக தரப்பை அண்மையில் சந்தித்து பேசியது. இச்சந்திப்பில் காங்கிரஸை கூட்டணியில் இருந்து வெளியேற்றிவிடுங்கள். தேர்தலுக்குப் பின் சூழலைப் பொறுத்து அடுத்த கட்டமாக முடிவெடுங்கள் என நெருக்கடி கொடுத்திருக்கிறார் அந்த பிரமுகர். திமுக தரப்பும் எப்படியும் சட்டசபை, லோக்சபா தேர்தலில் நமக்கே வெற்றி என்கிற நம்பிக்கையில் இருக்கிறது. இந்த வெற்றியில் ஏன் சீண்டும் காங்கிரஸுக்கு பங்கு தர வேண்டும்? என்கிற யோசனையுடன் 'ஆகட்டும் பார்க்கலாம்' என சில கணக்குகளுக்காக தலையசைத்திருக்கிறதாம். அதனால் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸை வெளியேற்றும் பரபர நிகழ்வுகள் இனி வரும் நாட்களில் அரங்கேறும் என கூறப்படுகிறது.