ரயில் கட்டண உயர்வு: பாஜக கூட்டணித் தலைவர்கள் வைகோ, விஜயகாந்த், ராமதாஸ் கடும் எதிர்ப்பு!
சென்னை: மத்திய அரசின் பயணிகள் ரயில் கட்டணம் மற்றும் சரக்கு கட்டணம் உயர்வுக்கு பாரதிய ஜனதாவின் கூட்டணிக் கட்சித் தலைவர்களான மதிமுக பொதுச்செயலர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதேபோல் ரயில் கட்டண உயர்வுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், சமக தலைவர் சரத்குமார் ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மதிமுக பொதுச்செயலர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கடந்த ஆண்டு, 2013, பிப்ரவரி மாதம் ரயில் பயணிகள் கட்டணம் 20 விழுக்காடு உயர்த்தப்பட்டது. மீண்டும் அக்டோபரில் 2 விழுக்காடு உயர்ந்தது. ஆக கடந்த ஆண்டு மட்டும் ரயில் பயணிகள் கட்டணம் 22 விழுக்காடு உயர்வு என்பது மக்கள் மீது தாங்க முடியாத சுமையை ஏற்றுவதாக இருந்தது.
சரக்குக் கட்டண உயர்வு
அதே போல சரக்குக் கட்டணமும் கடந்த ஆண்டில் ஏப்ரல் மாதத்தில் ஒருமுறையும், அக்டோபரில் இரண்டு முறையும் 8.9 விழுக்காடு அளவுக்கு ஏற்றப்பட்டது. தற்போது மீண்டும் 6.5 விழுக்காடு அதிகரித்தால் சரக்கு போக்குவரத்துக் கட்டணம் உயர்ந்து, விலைவாசியும் கணிசமாக உயரும் வாய்ப்பு இருக்கிறது.
விலைவாசி உயர்வு
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பொருளாதாரக் கொள்கைகளால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து விலைவாசி கடுமையாக அதிகரித்து, மக்களை வாட்டி வதைத்தது. டீசல் விலை உயர்ந்தால் ரயில் பயணிகள் மற்றும் சரக்கு கட்டணங்களை அதிகரிப்பதற்காகவே முந்தைய அரசு ரயில் கட்டண நிர்ணய ஆணையத்தை உருவாக்கியது.
பொதுமக்களுக்கு பாதிப்பு
பேருந்து கட்டண உயர்வால் ஏழை, எளிய சாதாரண மக்கள் ரயில் பயணத்தையே நம்பி இருக்கின்றனர். இந்நிலையில் பயணிகள் கட்டணம் அதிகரித்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே மத்திய அரசு ரயில் பயணிகள் கட்டணம் மற்றும் சரக்கு கட்டணம் உயர்வை மறு ஆய்வு செய்து உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை:
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்டண உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் ரயில் கட்டணமும் பெட்ரோல், டீசல் விலைகளும் குறைக்கப்படும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம்தான் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே பஸ் கட்டணம் கடுமை யாக உயர்ந்துள்ள நிலையில், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்களின் தொலைதூரப் பயணங்களுக்கு ரயில்களையே நம்பி யுள்ளனர். எனவே, மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ரயில் கட்டண உயர்வைத் திரும்பப் பெறவேண்டும் என்று கூறியுள்ளார்.
ஜி.ராமகிருஷ்ணன்
மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் தமது அறிக்கையில், சாதாரண ஏழை எளிய, நடுத்தர மக்களை மிகக் கடுமையாகப் பாதிக்கும் என்று தெரிந்திருந்தும் மத்திய அரசு ரயில் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. நரேந்திரமோடி பிரதமரானால் விலைவாசி குறையும் என்று நம்பி வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
சரத்குமார்
சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறுகையில், ரயில்களில் பராமரிப்புப் பணி மோசமாக உள்ள நிலையில் கட்டணத்தை மட்டும் உயர்த்தியது எந்த விதத்தில் நியாயம்? சரக்குக் கட்டணமும் உயர்ந்திருப்பதால் விலைவாசி மேலும் உயரும். பட்ஜெட்டுக்கு முன்பாகவே ரயில் கட்டணத்தை உயர்த்தியிருப்பது மக்களுக்கு ஏமாற்றமே என்று கூறியுள்ளார்.
எஸ்.டி.பி.ஐ. கண்டனம்
ரயில் கட்டண உயர்வு மக்கள் விரோத செயல் என்றும் உடனே அதை திரும்ப பெறவேண்டும் என்றும் எஸ்.டி.பி.ஐ.கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் தமிழ்மாநிலத்தலைவர் தெஹலான் பாகவி கூறியுள்ளதாவது:
பயணிகள் இரயில் கட்டணம் 14.2 சதவீதமும், சரக்கு கட்டண உயர்வு 6.2 சதவீத உயர்வு என்பதும் மக்களை பெரிதும் பாதிக்கக்கூடியது. பாஜக அரசு உடனடியாக இரயில் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். இல்லையேல் நாடு முழுவதும் மக்கள் அரசுக்கு எதிராக கொதித்தெழுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.