பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற பாஜக கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தல்!
சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக, பாமக ஆகிய கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இது தொடர்பாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய அரசு அறிவித்துள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பணவீக்கம் கனிசமாக அதிகரிப்பதுடன் இதன் எதிரொலியாக விலைவாசியும் உயரும். ரயில் பயணிகள் மற்றும் சரக்குக் கட்டணம் உயர்த்தப்பட்டதால், சாதாரண ஏழை, எளிய மக்கள் தங்கள் மீது பெரும் சுமை ஏற்றப்பட்டுள்ளதாக கவலை அடைந்துள்ள நிலையில், தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மேலும் பாதிப்பு அடையும் நிலை ஏற்படும்.
முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, 2010 ஜூன் மாதம் முதல் பெட்ரோல் விலை நிர்ணயிக்கும் பொறுப்பையும், 2013 ஜனவரி மாதம் முதல் டீசல் விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பையும் எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைத்தது. அதிலிருந்து பெட்ரோல், டீசல் விலைகள் தாறுமாறாக உயர்த்தப்பட்டு வருகின்றன.
காங்கிரஸ் கூட்டணி அரசு பொறுப்பை தட்டிக் கழித்துவிட்டு, அலட்சியப் போக்குடன் நடந்துகொண்டதால்தான் பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து உயர்ந்தன. இதன் விளைவாக ஒட்டுமொத்த பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட முடியாமல் விலைவாசி அதிகரித்து வந்தது.
எனவே, மத்திய அரசு உடனடியாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கொள்கையை மாற்றி அமைத்து பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பை மீண்டும் மத்திய அரசு ஏற்க வேண்டும்.
விலைவாசி ஏற்றத்திற்கு வழிவகுக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
ஈராக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை காரணம் காட்டி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.69 பைசாவும், டீசல் விலை 50 பைசாவும் உயர்த்தப்பட்டிருக்கிறது. உள்ளூர் வரிகளையும் சேர்த்தால் டீசல் விலை லிட்டருக்கு 58 பைசாவும், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.17 பைசாவும் உயர்ந்துள்ளது.
மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்ற பிறகு டீசல் விலை உயர்த்தப்பட்டிருப்பது இது இரண்டாவது முறையாகும். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் உருவாக்கப்பட்ட திட்டத்தின்படி, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் டீசல் விலை மாதத்துக்கு 50 பைசா வீதம் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 17 தவணைகளில் மொத்தம் ரூ.11.57 பைசா டீசல் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால் சரக்குந்து உள்ளிட்ட ஊர்திகளின் வாடகைக் கட்டணமும், அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் ஏற்கனவே உயர்ந்துள்ளன. அதுமட்டுமின்றி, ரயில் கட்டணம், சர்க்கரை விலை ஆகியவற்றை மத்திய அரசு ஏற்கனவே உயர்த்தியிருப்பதால் மக்கள் பெரும் பொருளாதார சுமையை சுமந்து கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் இவ்விலை உயர்வு சாதாரண மக்களுக்கு கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும். நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின்னர் விலைவாசி குறையும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதை நிறைவேற்ற வேண்டியது புதிய அரசின் கடமை ஆகும்.
எனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அதுமட்டுமின்றி, எரிபொருள் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயிக்க வகை செய்யும் விலை நிர்ணயக் கொள்கையையும் ரத்து செய்ய வேண்டும்'.
இவ்வாறு ராமதாஸ் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.