40 சீட் கேட்ட இந்திய கல்வி மக்கள் முன்னேற்றக் கழக தேவநாதன்; 24 சீட் கொடுத்த பாஜக
சென்னை: சட்டசபைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள, தேவநாதன் தலைமையிலான இந்திய கல்வி மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு, 24 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
40 தொகுதிகளில் செல்வாக்கு உள்ளது என்று கூறி குறிப்பிட்ட 30 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று அடம் பிடித்த தேவநாதனுக்கு 24 சீட்களை கொடுத்து சமாதானப்படுத்தியுள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொறுப்பாளராக அரசியல் வாழ்க்கையை துவங்கியவர் விண் டிவியின் நிறுவனர் தேவராஜன்.
'யாதவர் மகாசபை' என்ற பெயரில் இயக்கம் நடத்தி வந்தார். விண் டிவி மற்றும் தமிழ் நியூஸ் பத்திரிகை உரிமையாளரான இவர் கடந்த 2006 சட்டசபைத் தேர்தலில் 42 தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்தார். நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் யாதவர் மகாசபை சார்பில் தேவநாதன் போட்டியிட்டார்.
இந்நிலையில் 2011ம் ஆண்டு சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துகோனின் 252வது நினைவு நாளன்று புதிய அரசியல்கட்சியாக "அக்னி பறவைகள்' என்ற பெயரில் அரசியல் கட்சியை துவங்கினார். அரசியல் கட்சிக்கு தனி அந்தஸ்து வேண்டும் என்பதற்கான தனது கட்சியை இந்திய கல்வி மக்கள் முன்னேற்றக் கழகமாக மாற்றினார் தேவநாதன்.
சட்டசபை தேர்தலில், பெரிய கட்சிகள் எதுவும் கூட்டணிக்கு வராததால், சிறிய கட்சிகளுடன் களம் காண பாஜக தயாரானது. கூட்டணியில் சேர்ந்த சமத்துவ மக்கள் கட்சி அதிமுகவில் சேர்ந்து விட்டது. தொகுதி உடன்பாடு எட்டப்படாத காரணத்தால் ஏ.சி சண்முகத்தின் புதிய நீதிக்கட்சியும் கழன்று கொண்டது.
தற்போது, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் ஆகியவற்றுடன் பாஜக தொகுதி பங்கீடு பற்றி பேசி சீட்களை அள்ளி வழங்கியுள்ளது.
இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன் ஏற்கனவே 40 இடங்களை குறிப்பிட்டு, அதில் குறைந்தது 30 வேண்டும் என கேட்டார். அவருக்கு 24 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த தொகுதிகள் தேவநாதன் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை.