மிஸ்டர் "ம.பி" இல. கணேசன் அவர்களே.. இப்படியே பேசினால் தமிழகம் பாஜகவை 'தியாகம்' செய்யும்!
தமிழகத்தின் உரிமைகளை காவு கொடுக்க கும்பலாக கங்கணக் கட்டிக் கொண்டு அலைந்தால் இந்த மண் பாஜகவை தியாகம் செய்துவிடும் என்பதை மறுக்க முடியாது.
சென்னை: ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு முட்டுக் கொடுத்து இல. கணேசன் உள்ளிட்ட தலைவர்கள் தொடர்ந்து பேசிவருவதால் பாஜகவை தமிழகம் தியாகம் செய்யும் நிலை ஏற்படும் என்பதை மறுக்க முடியாது.
தமிழகத்தை நாசமாக்கும் அரசியல் சூழ்நிலைகளின் பின்னணியில் பாஜகதான் இருக்கிறது என்பதை நாடும் நாட்டு மக்களும் நன்கு அறிவர். இந்த அரசியல் துரோகங்களுடன் வாழ்வாதாரங்களை வேட்டையாட மக்களின் வாழ்வுரிமைகளை பச்சை படுகொலை செய்யும் படுபாதக செயலையும் அரங்கேற்றி வருகிறரார்கள்.
தமிழகத்தின் காவிரி உரிமையை கர்நாடகா கபளீகரம் செய்ய துணை போனது மத்திய பாஜக அரசு; காவிரி ஆற்றின் குறுக்கே அணைகள் கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி கொடுக்கிறது மத்திய பாஜக அரசு.
மாண்டு போன விவசாயிகள்
மத்திய பாஜக அரசின் பச்சை துரோகத்தால்தான் 250-க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் மாண்டு போயினர். இவை வெறும் சாவுகள் அல்ல... மத்திய பாஜக அரசு கைவிட்டதால் நடந்த கொடூர மரணங்கள்.
துரோகம்..துரோகம்..
பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கேரளாவுக்கு அனுமதி கொடுக்கிறது மத்திய பாஜக அரசு. இப்படி தமிழகத்தின் நாலாபுறமும் துரோகத்தை மட்டுமே செய்து வருகிறது பாரதிய ஜனதா கட்சி.
காவு வாங்க புறப்பட்ட கும்பல்
ஆனாலும் மத்திய பாஜக அரசின் கொலைவெறித்தனம் ஓய்ந்துவிடவில்லை. புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களை காவு வாங்க கும்பலாக கங்கணம் கட்டிக் கொண்டு களமிறங்கியுள்ளது.
முட்டுக்கொடுக்கும் பாஜக
இந்த கொலைவெறிக்கு முட்டுக்கொடுத்துக் கொண்டு நாடகமாடிக் கொண்டிருக்கிறார்கள் தமிழக பாஜக தலைவர்கள். அதுவும் மத்திய பிரதேச ராஜ்யசபா எம்.பியான இல. கணேசன், ராஜவிசுவாசத்தை ரொம்பவே காட்டுகிறார்.
போய் சொல்லுங்களேன்...
ஒரு நாடு நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு மாநிலம் தம்மை தியாகம் செய்ய வேண்டும் என்கிறார் இல. கணேசன். இதை இவர் கர்நாடகத்தில் போய்ச் சொல்ல முடியுமா.. மத்தியப் பிரதேசத்தில் போய்ச் சொல்ல முடியுமா.. கேரளா அல்லது ஆந்திராவில்தான் போய்ச் சொல்ல முடியுமா..
அன்று வாடிவாசல் இன்று நெடுவாசல்
சொந்த மாநிலத்தின் மக்களின் நலனை பதவிக்காக நீங்கள் தியாகம் செய்யலாம்...அது உங்கள் சொந்த பிரச்சனை.. ஆனால் தமிழக மண் நாசக்காடாகிக் கொண்டிருக்கிறது என ஒட்டுமொத்த மாநிலமே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.. அன்று வாடிவாசல் திறக்க களம் கண்ட இளைஞர் படை இப்போது நெடுவாசலை காக்க தியாகப் போராட்டங்களில் தீவிரமாகிறது...
தீவிரவாதிகளா?
இந்த நிதர்சனத்தை நிராகரித்துவிட்டு மக்கள் வசைமாரிகளைப் பற்றியோ ஒப்பாரிகளைப் பற்றியோ கவலைப்படாமல் ஒய்யாராமாக பொன்னாரும் ஹெச் ராஜாவும் தமிழிசையும் தொடர்ந்து தமிழர் விரோத குரலை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்... நெடுவாசலில் போராடுவது தீவிரவாதிகள் என்று பச்சையாக நாக்கில் நரம்பே இல்லாமல் சொல்கிறார் ஹெச்.ராஜா.
மறந்துபோனதா புரட்சி?
நெடுவாசல் ஒரு குக்கிராமம்தானே.. தமிழகத்தின் பொம்மை அரசாங்கத்தின் போலீஸ் குண்டாந்தடிகளால் பதம் பார்த்து அதை முடக்கிவிடலாம் என பகல் கனவு காண்கிறதா பாஜக... அன்று அலங்காநல்லூர் வாடிவாசலில்தான் புரட்சி மையம் கொண்டது... உலகமே அதிர சென்னை மெரினாவில் கரையைக் கடந்த புரட்சியை அவ்வளவு எளிதாக பாஜக மறந்து போகிறதா?
தமிழகம் தியாகம் செய்துவிடும்
நீங்கள் அந்த புரட்சியை மறக்கலாம். ஆனால் இப்படியே பேசிக் கொண்டிருந்தால் ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளும், இளைஞர்களம், மாணவர்களும், மக்களும், இவர்களையம், இவர்களது பாஜக கட்சியையும் மறக்கும் நிலை உருவாகும்.. தமிழக மக்கள் பாஜகவை தியாகம் செய்ய தயாராகி விட்டனர் என்பதையும் இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.. எதையும் பேசுவதற்கு முன்பு.