புதுச்சேரி: பெண் அரசு ஊழியர்களுக்கு பாலியல் தொந்தரவு.. அதிகாரியைக் கண்டித்து பாஜக போராட்டம்
புதுச்சேரியில் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசு அதிகாரியைக் கண்டித்து பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி: புதுச்சேரியில் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கால்நடைத்துறை இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்ககோரி பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி மாநிலத்தில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் குறித்த புகார்களை விசாரிக்க ஆணையம் அமைக்க ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டதன் பேரில், அண்மையில் புதிய ஆணையம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது.
இதன் தலைவராக வித்யா ராம்குமார் என்பவரும், உறுப்பினர்களும் அந்த ஆணையத்தில் நியமிக்கபட்டனர். இவர்கள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் பெண்களின் புகார்களை விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், அரசுத்துறை இயக்குநர்கள் மீது பாலியல் புகார் வந்ததை அடுத்து, அதன் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் கிரண் பேடி ஆணையத்திற்கு உத்தரவிட்டார். இதில், கால்நடைத்துறை இயக்குநராக பணியாற்றி வரும் பத்மநாபன் என்பவர் மீது 27 பெண்கள் புகார் கொடுத்து இருந்தனர்.
அந்த புகாரில், இயக்குநர் பத்மநாபன் தன்னுடன் பணிபுரியும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததும், அதற்கு இணங்காதவர்களை மிரட்டியதும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாஜக மகளிர் அணியினர் இன்று கால்நடைத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மேலும், போராட்டத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் அதிகாரிகளையும், புதுச்சேரி மாநில அரசையும் கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பினர். பேரணியாக செல்ல முயன்றவர்களை போலீஸார் தடுத்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.