முழுஅடைப்பின் போது டீக்கடையை திறந்து வைத்த பாஜக பிரமுகர்... அரக்கோணத்தில் கடை சூறை!
முழுஅடைப்புக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அரக்கோணத்தில் செயல்பட்டு வந்த பாஜக பிரமுகரின் டீக்கடையை போராட்டக்காரர்கள் சூறையாடினர்.
அரக்கோணம் : முழுஅடைப்பின் போது கடையை திறந்து வைத்திருந்ததாகக் கூறி அரக்கோணத்தில் பாஜக பிரமுகரின் டீக்கடையை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நடைபெறும் முழுஅடைப்பையொட்டி ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இந்தக் கடை மட்டும் இயங்கியதால் அதனை மூட வலியுறுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் நகரில் இன்று முழு அடைப்புக்கு ஆதரவாக ஓட்டல்கள், வர்த்தக நிறுவனம், டீக்கடைகள், துணிக் கடைகள் என அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. முழுஅடைப்பையொட்டி அரசியல் கட்சியினர் அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து, சுவால்பேட்டை வழியாக ஊர்வலமாக சென்றனர்.
அப்போது அந்தப் பகுதியில் பாஜக பிரமுகர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் டீ கடை மற்றும் குளிர்பான கடைகளை திறந்து வைத்திருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் கடைகளை மூட வலியுறுத்தி கடையில் வைத்திருந்த குளிர் பான பாட்டில்களை கடையின் மீது எரிந்து கடைகளை அடித்து நொறுக்கினர்.
பின்னர் அதே பகுதியில் சாலைமறியலிலும் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபடவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர். இதனைத் தொடர்ந்து ஜோதி நகர் மற்றும் புதுப்பேட்டை பகுதிகளில் சென்ற 2 தனியார் பேருந்து கண்ணாடிகளை திமுகவினர் அடித்து நொறுக்கினர். மேலும் அரக்கோணம் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட முயன்ற திமுகவினரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.