டெபாசிட் தொகை இல்லை... காயத்ரி ரகுராமுடன் வந்த பாஜக வேட்பாளர் திணறல்... கடன் வாங்கிய பரிதாபம்!
ஈரோடு: ஈரோடு மேற்கு தொகுதி பாஜக வேட்பாளர் பழனிச்சாமி, வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்த போது டெபாசிட் தொகை இல்லாமல் வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பின்னர் மாற்று வேட்பாளரிடம் பணத்தைப் பெற்று அவர் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி, ஈரோடு மேற்குத் தொகுதிக்கு பாஜக வேட்பாளராக பழனிச்சாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவர் நேற்று நடிகை காயத்ரி ரகுராம் உள்பட சில பெண்களுடன் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு வந்திருந்தார். ஆனால், அப்போது அவர் போட்டியிட கட்ட வேண்டிய டெபாசிட் தொகையைக் கொண்டு வரவில்லை. இதனால் அவர் வேட்புமனுத் தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து உடனடியாக பாஜக மாற்று வேட்பாளரிடம் பணத்தைப் பெற்று அவர் தனது டெபாசிட் தொகையைக் கட்டினார். இந்த சம்பவங்களால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பாஜக வேட்பாளர் பழனிச்சாமி மட்டுமினிறி, காந்திய மக்கள் இயக்க வேட்பாளர் பெரியசாமி, மதிமுக முருகன், இந்திய திராவிட மக்கள் முன்னேற்ற கட்சியை சேர்ந்த வேலுசாமி, ஒரு சுயேச்சை வேட்பாளர் என ஐந்து பேர் நேற்று ஈரோடு மேற்கு தொகுதிக்கு, தேர்தல் நடத்தும் அலுவலரான ஆர்.டி.ஓ., நர்மதா தேவியிடம் மனுத் தாக்கல் செய்தனர்.