கிரிமினல் வழக்கில் தேடப்பட்டு வருபவர்தான் ஸ்ரீரங்கம் பாஜக வேட்பாளர்: வக்கீல் பரபரப்பு பேட்டி
சென்னை: ஸ்ரீரங்கம் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் எம்.சுப்பிரமணியம், மோசடி மற்றும் கொலை மிரட்டல் வழக்குகளில் தேடப்பட்டு வருபவர் என்று வழக்கு தொடர்ந்த நிறுவனத்தின் வழக்கறிஞரான சிவா கூறியுள்ளார்.
ஸ்ரீரங்கம் சட்டசபை இடைத் தேர்தலில், பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார், எம்.சுப்பிரமணியம். இதனிடையே சோழவந்தானை சேர்ந்த வழக்கறிஞர் சிவா இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
ஜெயராம், ஆக்ஸ்போர்ட், அங்காளம்மன் என்ற பெயர்களின் 3 என்ஜினீயரிங் கல்லூரிகளை எம்.சுப்பிரமணியம் நடத்தி வருகிறார். இவரது கல்லூரிகளின் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிப்பதற்காக பிரிசிஷன் இன்போடெக் என்ற தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தார்.
இதன்படி கம்ப்யூட்டர் பயிற்சி அளித்த இந்த நிறுவனத்துக்கு, ரூ.1.13 கோடி ரூபாய் தரவேண்டும். இந்த பணத்தை கேட்டு சென்ற பிரிசிஷன் கம்யூட்டர் நிறுவனத்தில் நிர்வாகி பாஸ்கர் சென்றார். ஆனால், பணத்தை கொடுக்காமல் ஏமாற்றியது மட்டுமல்லாமல், எம்.சுப்பிரமணியம், அவரது கல்லூரிகளின் முதல்வர்கள் என்.கண்ணன், ஜி.சேதுராமன், கிறிஸ்ட்ராஜ் ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பாஸ்கர் கொடுத்த புகாரின் அடிப்படையில், திருச்சி மத்திய குற்றப்பிரிவு போலீசார், எம்.சுப்பிரமணியம் உள்ளிட்ட 4 பேர் மீது கொலை மிரட்டல், மோசடி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் சுப்பிரமணியத்தை போலீசார் அன்று முதல் தேடி வருகின்றனர்.
இதற்கிடையில், ஹைகோர்ட்டு மதுரை கிளையில், முன்ஜாமீன் கேட்டு எம்.சுப்பிரமணியம் மற்றும் கல்லூரி முதல்வர்கள் 3 பேரும் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். இந்த முன்ஜாமீன் மனுக்கள் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் அவர்களுக்கு முன்ஜாமீன் கொடுக்கக் கூடாது என்று பிரிசிஷன் இன்போடெக் நிறுவனம் சார்பில், ஹைகோர்ட்டு மதுரை கிளையில் நான் மனு தாக்கல் செய்துள்ளேன்.
ஒரு கிரிமினல் வழக்கில் தேடப்பட்டும் வரும் ஒரு நபரை பாஜக. வேட்பாளராக அறிவித்துள்ளது எங்கள் கட்சிக்காரருக்கு (பிரிசிஷன் கம்ப்யூட்டர் நிறுவனம்) அதிர்ச்சியை அளித்துள்ளது. இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம், பாஜக. தலைவர் அமித்ஷா, தமிழக பாஜக நிர்வாகிகள் மற்றும் ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு முறையான புகாரை என் கட்சிகாரர் சார்பில் கொடுக்க உள்ளேன்.
இவ்வாறு வக்கீல் சிவா கூறினார்.