ரசித்து ருசித்து சாப்பிட நல்ல மீ்ன் நம்ம "நமோ" மீன்.. வாங்கம்மா வாங்க.. வாங்கய்யா வாங்க.. !
உலக மீனவர் தினத்தை முன்னிட்டு மத்திய சென்னை மாவட்ட பாஜக சார்பில் நமோ மீன் கண்காட்சி மற்றும் மீன் உணவுத் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை : உலக மீனவர் தினத்தை முன்னிட்டு மத்திய சென்னை மாவட்ட பாஜக சார்பல் நமோ மீன் கண்காட்சி மற்றும் மீன் உணவுத் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தங்களது கடின உழைப்பின் மூலம் அந்நிய செலாவணியை அதிகமாக ஈட்டித்தரக்கூடிய மீனவர்களை கவுரவப்படுத்தும் வகையில், இந்த நாள் கொண்டாடப்படுகிறது. மீனவர்களின் கோரிக்கையின் பயனாக இந்த வருட மீனவர் தினம் அரசு விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் குளச்சல் கடற்கரையில் மீனவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் பல போட்டிகளை நடத்திட மீன்வளத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
இதே போன்று கடல் ஒட்டியுள்ள பகுதிகளில் அரசு சார்பில் மீனவர் தின கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் பாஜகவின் மத்திய சென்னை மாவட்ட பாஜக மீனவர் அணி சார்பில் மீன் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாஜகவின் ஏற்பாடு
சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லம் அருகே நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சிக்கு நமோ மீன் கண்காட்சி மற்றும் மீன் உணவுத் திருவிழா என்று பெயரிடப்பட்டுள்ளது. பாஜக சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனரில் பிரதமர் நரேந்திர மோடி கையில் மீனை தூக்கிக் கொண்டு நிற்பது போல டிசைன் செய்யப்பட்டுள்ளது.
சென்டிமென்ட் தேடும் பாஜக
மேலும் பேனரில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், சி.பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரின் படங்களும் இடம்பெற்றுள்ளன. மீனவர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக இந்த பேனர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மீன்களின் அணிவகுப்பு
அது சரி நமோ கண்காட்சியில் என்ன சிறப்பு என்கிறீர்களா பிரெஷ்ஷான மீன்கள், அதன் பெயர் விளக்கத்தோடு கடை விரித்து வைக்கப்பட்டுள்ளது. கருக்கான், ஜிலேபி, பெரிய சுறா, பாறை என்று மீன்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
கண்காட்சியை தொடங்கி வைத்த தமிழிசை
இந்த கண்காட்சி மற்றும் மீன் உணவுத் திருவிழாவை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்துள்ளார். சி.பி.ராதாகிருஷ்ணன், டால்பின் ஸ்ரீதர், மீனவர் அணித் தலைவர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.