முதல்வர் ஸ்டாலினை தரக்குறைவாக பேசிய .. பாஜக மாநில நிர்வாகி அகோரம் திடீர் கைது.. சீர்காழியில்..!
பாஜக நிர்வாகி அகோரம் சீர்காழியில் இன்று கைதானார்
மயிலாடுதுறை: முதல்வர் ஸ்டாலினை தரக்குறைவாகவும், வன்முறையை தூண்டும் வகையிலும் பேசிய பாஜக மாநில துணை செயலாளர் அகோரம் கைது செய்யப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருவெண்காடு பகுதியை சேர்ந்தவர் அகோரம். இவர் பாஜகவில் ஓ.பி.சி அணியின் மாநில துணை தலைவராக பொறுப்பில் உள்ளார்.
நேற்று பாஜக சார்பில் அரியலூர் மாவட்டம் ஜெயகொண்டத்தில், மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு அகோரம்தான் தலைமை தாங்கினார்.
கொரோனா பாதிப்பில் இருந்து நடிகர் கமல்ஹாசன் குணமடைந்தார்- மீண்டும் பிக்பாஸ்-5 தொகுத்து வழங்குகிறார்!
மிரட்டல்
போராட்டத்தின்போது அகோரம், தமிழக முதல்வர் ஸ்டாலின் பற்றியும், தமிழக அரசை பற்றியும் தரக்குறைவாக பேசியுள்ளார்.. தமிழக அரசை தரக்குறைவாக விமர்சனம் செய்தது, பலருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. அதுமட்டுமல்ல, ஒரு வார காலத்திற்குள் பெட்ரோல் டீசல் விலையை குறைக்காவிட்டால், தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் என்று அந்த கூட்டத்தில் பாஜகவினர் மிரட்டலும் விடுத்தனர்.
தனிப்படை
இதனால் இதுகுறித்து சீர்காழி போலீசில் புகார் செய்யப்பட்டது... இதையடுத்து, தனிப்படை போலீசார் அகோரத்தை கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர். பிறகு சீர்காழி துணை காவல் கண்காணிப்பாளர் லாமேக் முன்னிலையில் மயிலாடுதுறை டிஎஸ்பி அலுவலகத்தில் அகோரம் ஆஜர்படுத்தப்பட்டார்..
பரபரப்பு
அதற்குள், அகோரத்தை கைது செய்ததை அறிந்த பாஜக தொண்டர்கள் ஏராளமனோர் டிஎஸ்பி முன்பு திரண்டுவிட்டனர்.. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது... இறுதியில், ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அகோரம் சிறையில் அடைக்கப்பட்டார். கைதாகி உள்ள அகோரம், ராதாநல்லூர் பகுதியை சேர்ந்தவர்.. ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்தவர்..
போட்டி
இவர் மயிலாடுதுறை எம்பி தேர்தலில் போட்டியிட்டு அதில் தோல்வியையும் தழுவியவர்... இந்த வழக்கு தவிர, அகோரம் மீது ஏற்கனவே கொலை வழக்குகள் உட்பட 30 வழக்கு நிலுவையில் உள்ளதாம்... இவரை கைது செய்துள்ளதற்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்... இந்த கைது நடவடிக்கையானது, கருத்து சுதந்திரத்தை குரல்வளை கொண்டு நெறிக்கிறது விடியல் அரசு என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.