சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாள்- சென்னையில் பாஜகவினர் “ஒற்றுமை ஓட்டம்”!
சென்னை: தமிழகத்தில் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளை முன்னிட்டு ஒற்றுமைக்கான ஓட்டத்தினை தமிழக பாஜக கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழக பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் கி.சர்வோத்தமன் வெளியிட்ட அறிக்கையில், "இந்திய தேசத்தின் முன்னாள் உள்துறை அமைச்சரான வல்லபாய் பட்டேலின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. அன்று நாடு முழுவதும் ‘‘ஒற்றுமைக்கான ஓட்டம்'' மற்றும் உறுதிமொழி ஏற்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சென்னையில், ‘‘ஒற்றுமைக்கான ஓட்டம்" நிகழ்ச்சி, நாளை காலை 8 மணிக்கு மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலையிலிருந்து தொடங்கி கலங்கரை விளக்கம் வரை நடைபெறும்.
இதில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், இளைஞர் அணி, மகளிர் அணி ஆகியோர் அனைவரும் கலந்து கொள்கிறார்கள்.
ஒற்றுமை ஓட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொள்ள இசைவு தெரிவித்துள்ளனர். பா.ம.க மாநில தலைவர் ஜி.கே.மணி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், புதிய நீதிக்கட்சி நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம், ரோட்டரி கிளப் தலைவர் நாசர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட தலைவர்கள் வி.காளிதாஸ், இரா.பிரகாஷ், எம்.ஜெய்சங்கர், பலராமன், ஜே.லோகநாதன் ஆகியோர் செய்து வருகின்றனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.