கோவை மேயர் தேர்தலில் போட்டியிடுவோம்.. தமிழிசை அறிவிப்பு
கோவை: தமிழக உள்ளாட்சி இடைத் தேர்தலில் குறிப்பாக கோவை மேயர் தேர்தலில் பாஜக கூட்டணி கட்சியினருடன் இணைந்து போட்டியிடும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கோவை வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் செப்டம்பர் 18ம் தேதி நடைபெறும் உள்ளாட்சி இடைத்தேர்தலில் பா.ஜ.க, நிச்சயம் போட்டியிடும். இதற்கான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் சென்னையில் செப்டம்பர் 2ம் தேதி நடக்கிறது. வேட்பாளர்கள் பட்டியல் செப்டம்பர் 3ம் தேதி வெளியிடப்படும்.
கடந்த லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் மிக குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் இரண்டு, மூன்று இடங்களில் தோல்வியடைந்துள்ளோம். தமிழ்நாட்டில் பா.ஜ.க, ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ளதை எடுத்துக்காட்டுவதாக இது அமைந்தள்ளது.
பிரதமர் மோடியின் நூறு நாள் ஆட்சியில் தொழில் வளர்ச்சி பெற்றுள்ளது, பொருளாதாரம், வேலைவாய்ப்பு உயர்ந்துள்ளது, பணவீக்கம் குறைந்துள்ளது என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. பிரதமரின் அனைவருக்கும் வங்கி கணக்கு திட்டத்தால், ஏழை மக்கள் வங்கி கடனுதவி பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.