அரவக்குறிச்சியில் 45 நிமிடம் தாமதமாக தொடங்கிய வாக்கு எண்ணிக்கை
அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக, தேமுதிகவினர் போராட்டம் நடத்தியதால் வாக்குகளை எண்ணும் பணி தாமதமடைந்து சுமார் 45 நிமிடங்கள் கழித்து வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
கரூர்: அரவக்குறிச்சியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஏராளமான முகவர்கள் குவிந்ததால், முகவர்களுக்கு உட்கார இடம் இல்லை என்று கூறி தேமுதிக, பாஜக வேட்பாளர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. வேட்பாளர்கள் போராட்டதால் வாக்கு எண்ணிக்கை பணியில் தாமதம் ஏற்பட்டது.
தேர்தல் அதிகாரிகளின் சமாதானத்தை தொடர்ந்து, 45 நிமிடங்கள் தாமதமாக 8.45 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
அரவக்குறிச்சி தொகுதியில் பதிவான வாக்குகள் கரூரில் உள்ள எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. அங்கு ஒரே அறையில் 14 மேஜைகள் போடப்பட்டுள்ளது. ஒரு சுற்று என்பது 14 மேஜைகளில் 14 மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் தனித்தனியாக எண்ணப்படுகிறது. மொத்தம் 18 சுற்று வாக்குகள் எண்ணப்படுகிறது.
அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியும், திமுக வேட்பாளர் கே.சி. பழனிச்சாமியும் களத்தில் உள்ளனர். இருவரில் ஒருவருக்கே அதிகம் வாய்ப்பு உள்ளதாக கள நிலவரம் கூறுகிறது.
யார் வெற்றி பெற்று சட்டசபைக்குள் எம்.எல்.ஏவாக நுழைவார்கள் என்பது இன்று பிற்பகலுக்குள் தெரியவரும்.