நடிகர் சூர்யா ஒரு தற்குறி ; அவருக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை -ஜீவஜோதி
தஞ்சை: நடிகர் சூர்யா ஒரு தற்குறி என்றும் அவருக்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை எனவும் பாஜக தெற்கு மாவட்ட துணைத் தலைவர் ஜீவஜோதி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய எழுச்சியை பெற்று வருவதாகவும் இளைஞர்கள் ஆர்வமுடன் கட்சியில் இணைவதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
நீட் தேர்வு வரவேற்க வேண்டிய விவகாரம் என்றும் ஆனால் எதிர்க்கட்சிகள் அதை வைத்து அரசியல் செய்வதாகவும் கூறியுள்ளார்.
சூர்யா மீது அவமதிப்பு நடவடிக்கை இல்லை... கவனமாக பேச வேண்டும் - ஹைகோர்ட் நீதிபதிகள் அறிவுறுத்தல்
சூர்யா தற்குறி
நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கை அரசியல் அரங்கில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சூர்யா கருத்தில் அரசியல் இருப்பதாக பாஜக தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்நிலையில் அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட துணைத்தலைவர் ஜீவஜோதி, நடிகர் சூர்யாவை தற்குறி என விமர்சித்துள்ளார். பிரதமர் பிறந்தநாள் விழாவை கொண்டாடி வரும் சூழலில் சூர்யாவுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
வரவேற்பு
தகுதியான நல்ல மருத்துவர்களை உருவாக்கும் நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்ட நீட் தேர்வு வரவேற்க வேண்டிய ஒன்று என்றும், ஆனால் அதை அரசியலுக்காக எதிர்த்து அரசியல் செய்து வருவதாகவும் தெரிவித்தார். மாணவர்களை திசை திருப்பும் வேலைகளை எதிர்க்கட்சிகள் செய்து வருவதாக குற்றஞ்சாட்டினார்.
வெகு விமரிசையாக
எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்தாண்டு பிரதமர் மோடியின் பிறந்தநாளை தமிழகம் சிறப்பாக கொண்டாடுவதாகவும், பாஜகவின் இளைஞர்கள் ஆர்வமுடன் இணைந்து வருவதாகவும் பெருமிதம் தெரிவித்தார் ஜீவஜோதி. பாஜக அமோக வளர்ச்சி அடைந்து வருவதாகவும் கட்சியில் தமது பணிகள் சிறப்பாக சென்று கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
எதிர்வினை
சூர்யாவை செருப்பால் அடித்தால் ஒரு லட்சம் பரிசு என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ள நிலையில் சூர்யாவை தற்குறி என விமர்சித்திருக்கிறார் பாஜக நிர்வாகி ஜீவஜோதி. அரசியல் நாகரீகமின்றி பொதுவெளியில் தனிமனித தாக்குதலை முன்னெடுப்பது பாஜகவுக்கு தான் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அக்கட்சியின் மேலிடம் இன்னும் உணரவில்லை போல்.