அதிமுகவுக்கு திடீர் ஆதரவு- புதுச்சேரியில் பாஜகவுக்கு மீண்டும் 'அல்வா' தந்த என்.ஆர்.காங்.!
புதுவை நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் ஆதரவு தந்திருப்பது பாஜகவை ஏமாற்றமடைய வைத்துள்ளது.
சென்னை: புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸை வளைத்துப் போட்டு எப்படியும் கால் பதித்துவிடலாம் என போராடித்தான் பார்க்கிறது பாஜக. ஆனால் ஒவ்வொருமுறையும் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு கடைசியில் பாஜகவுக்கு பெப்பே காட்டி வருகிறார் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி.
புதுச்சேரியில் 2011 சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து கட்சி தொடங்கிய 3 மாதங்களில் ஆட்சியைப் பிடித்தது என்.ஆர். காங்கிரஸ். பின்னர் அதிமுகவுடனான உறவு முறிந்தது.
2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது புதிய திருப்பமாக பாஜக-என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அமைந்தது. இதில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.
ஆனால் 2015-ம் ஆண்டு ராஜ்யசபா தேர்தலின் போது திடீரென என்.ஆர். காங்கிரஸ்-அதிமுக கைகோர்த்தது. இதைத் தொடர்ந்து கடந்த சட்டசபை தேர்தலின் போதும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியை வளைத்துப் போட பாஜக மும்முரமாக பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தது.
என்.ஆர். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தால் எப்படியும் புதுவையிலும் காலூன்றி விடலாம்... ஆகக் குறைந்தது ஒன்றிரண்டு எம்.எல்.ஏ.க்கள் கிடைத்துவிடும் என வியூகம் வகுத்துக் கொண்டு களமிறங்கியது பாஜக. கடைசியாக என்.ஆர். காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என அறிவித்தது.
தற்போது நெல்லித்தோப்பு தொகுதிக்கான இடைத்தேர்தல் நவம்பர் 19-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலிலும் என்.ஆர். காங்கிரஸுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இன்று இந்த கூட்டணி முடிவாகிவிடும் என பாஜகவினர் கூறிவந்தனர்.
ஆனால் பாஜகவுக்கு மீண்டும் டாட்டா காட்டிவிட்டு அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகருக்கு ஆதரவை தெரிவித்திருக்கிறது என்.ஆர். காங்கிரஸ். இந்த முடிவால் பாஜக கடும் அதிர்ச்சியடைந்துள்ளது. புதுச்சேரியில் எப்படியும் கால்பதிக்கும் பாஜகவின் கனவு இம்முறையும் தகர்ந்து போயுள்ளது.