ஆர்.கே.நகரில் ஜெ.வுக்கு எதிராக பாஜக வேட்பாளராக களமிறங்கும் மாஜி. அதிமுக அமைச்சர் மருமகன்
சென்னை: சட்டசபைத் தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் , பா.ஜ.க வேட்பாளராக மாஜி அதிமுக அமைச்சர் அரங்கநாயகத்தின் மருமகன் எம்.என். ராஜா களம் இறக்கப்பட்டுள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, ஐஜேகே, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக்கழகம் உள்ளிட்ட சிறு சிறு கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுகிறது. நான்கு கட்டமாக வேட்பாளர்களை வெளியிட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் செ.அரங்கநாயகத்தின் மருமகன் எம்.என்.ராஜா ,56 என்பவரை களமிறக்கியுள்ளது.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில், கல்வி அமைச்சராக பதவி வகித்தவர் அரங்கநாயகம். 1991 - 96ல் ஜெயலலிதாவின் அமைச்சரவையிலும் கல்வி அமைச்சராக இருந்தார். தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து இரு முறை, கோவை (மேற்கு) சட்டமன்ற தொகுதியில் இருந்து இரு முறை என 4 முறை அதிமுக எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டவர்.
2006ம் ஆண்டு அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். 2014ம் ஆண்டு திமுகவில் இருந்து விலகிய அரங்கநாயகம், வேறு எந்த கட்சியிலும் இணையவில்லை.
சட்டசபைத் தேர்தலில் அரங்கநாயகத்தின் மருமகனை அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு எதிராக ஆர்.கே.நகர் வேட்பாளராக அறிவித்துள்ளது பாஜக
தருமபுரி மாவட்டம் பாலக் கோட்டில் பிறந்த இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார். மனைவி பாவைமலர். 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
பாஜக மாநில அமைப்புசாரா தொழிலாளர் பிரிவின் தலைவராகவும், சென்னை துறைமுக பொறுப்புக்கழக உறுப்பினராகவும் இருக்கிறார். இவர் முதல் முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார்.
1989ம் ஆண்டு முதல் நடைபெற்ற சட்டசபைத் தேர்தல்களை சந்தித்து 30 ஆண்டுகால அரசியல் அனுபவம் வாய்ந்த முதல்வருக்கு எதிராக வலுவான வேட்பாளரை களமிறக்குவோம் என்று பாஜக தலைவர்கள் கூறி வந்தனர். ஆனால் ஆர். கே.நகரில் அறிமுக வேட்பாளரை களமிறக்கியுள்ளது பாஜக. டெபாசிட் வாங்கினால் அதுவே பாஜகவிற்கு மகிழ்ச்சியான விசயம்தான்.