பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் டாக்டர் கிருபாநிதி காலமானார்
பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் டாக்டர் எஸ்.பி.கிருபாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடலூரில் காலமானார்.
கடலூர் : பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரான டாக்டர் கிருபாநிதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு பொன். ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கடந்த 2000மாவது ஆண்டில் பாஜகவின் தமிழகத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் டாக்டர் கிருபாநிதி. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவர், 1989ல் பாஜகவில் இணைந்தார். இவர் தான் முதல் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த தமிழக பாஜக தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடலூர் மாவட்டத் தலைவராக இருந்த கிருபாநிதி மாநில துணைத்தலைவராகி பின்னர் பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். பதவியேற்ற சில வருடங்களிலேயே கிருபாநிதிக்கும் மாநிலச் செயலாளராக இருந்த இல.கணேசனுக்கும் இடையே மோதல் வெடித்தது.
கிருபாநிதியை சாதிப்பெயரைச் சொல்லி இல.கணேசன் திட்டியதாலும், தேசியக் குழு கூட்டத்தில் தாக்கப்பட்டதாலும் கட்சிப் பணியில் இருந்து கிருபாநிதி ஒதுங்கியதாக தெரிகிறது. இந்நிலையில் 90 வயதான கிருபாநிதி இன்று கடலூரில் மரணமடைந்துள்ளார். மறைந்த கிருபாநிதி குடும்பத்தாருக்கு மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் Dr.SPகிருபாநிதி இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த மனவேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது (1)
— Pon Radhakrishnan (@PonnaarrBJP) October 19, 2017
அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில் கூறியள்ளதாவது : தமிழக பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் Dr.SPகிருபாநிதி இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த மனவேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரின் ஆன்மா நற்பதியை அடைய எனது பிரார்த்தனைகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.