தூத்துக்குடி மேயர் பதவியைப் பிடிக்க பாஜக மும்முரம்... மதிமுகவினருடன் தீவிர ஓட்டு வேட்டை
தூத்துக்குடி: தூத்துக்குடியில் மேயர் பதவிக்குப் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஜெயலட்சுமி ஆளுங்கட்சியினருக்கு நிகராக தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளார். மதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரும் அவருக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளனர்.
தூத்துக்குடி இடைத் தேர்தலில் கடைசி வரை நெருக்கடிகளுக்குப் பணியாமல் போட்டியிலிருந்து விலகாமல் நின்று விட்டார் ஜெயலட்சுமி.
அவருக்கு தற்போது மதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் ஆதரவு தெரிவித்து ஓட்டு வேட்டையாடுகின்றனர். கூட்டணிக் கட்சியினர் புடை சூழ ஜெயலட்சுமி தீவிரப் பிரசாரத்தில் குதித்துள்ளார்.
வீடு வீடாகப் போய் வாக்கு சேகரிப்பு
தூத்துக்குடி மாநகராட்சி பாரதீய ஜனதா கட்சி மேயர் வேட்பாளர் ஜெயலட்சுமிக்கு ஆதரவு கேட்டு தூத்துக்குடி மாவட்ட மதிமுக செயலாளர் எஸ்.ஜோயல் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார்.
ஸ்பிக் நகரம் - ராஜீவ் நகர்
வேட்பாளர் ஜெயலட்சுமி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் மதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.ஜோயல் முத்தையாபுரம், அத்திமரப்பட்டி, ஸ்பிக் நகர், தங்கம்மாள்புரம், ராஜூவ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார்.
அடிப்படை வசதிகள் இல்லை
அப்போது ஜோயல் பேசுகையில், தூத்துக்குடி மாநகராட்சி அதிமுக நிர்வாகத்தில் இருந்து 3வருடங்களாகியும் மக்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் முழுமையாக செய்து கொடுக்கப்படவில்லை. மாநகரமக்கள் சாலைவசதி, கழிவுநீர் ஓடை வசதி, தெருவிளக்கு வசதி, போக்குவரத்து வசதி என அடிப்படை வசதிகள் எதுவும்இன்றி தவித்து வருகின்றனர்.
தண்ணீர் தராமல் ஏமாறற்றிய அதிமுக
மாநகர மக்களுக்கு நாள்தோறும் தவறாமல் குடிநீர் தருவோம் என்று சொல்லி வெற்றி பெற்ற அதிமுகவினர் இன்று மாதத்திற்கு 3 நாட்கள் தான் குடிநீரே தருகின்றனர். அதுவும் எல்லா மக்களும் போதுமான அளவில் கிடைப்பதில்லை. குடிநீர் தட்டுப்பாட்டை தீர்ப்பதற்கு வழி தெரியாத அவர்கள் குடிநீர் கட்டணத்தை பலமடங்கு உயர்த்தி மக்களை அவதிக்கு தள்ளிவிட்டனர்.
மக்களைப் பாடாய்ப்படுத்துகின்றனர்
இப்படி மக்களை பாடாய்படுத்தி வரும் அதிமுகவினருக்கு தகுந்த பாடம் கற்பித்திட இத்தேர்தலில் நீங்கள் நமது கூட்டணி கட்சி வேட்பாளர் ஜெயலட்சுமிக்கு வெற்றியை தேடித்தர வேண்டும்.
வெற்றி பெறச் செய்யுங்கள்
மாநகரில் நிலவிவரும் குடிநீர் தட்டுப்பாட்டை நிரத்தரமாக போக்கிடவும், தூத்துக்குடி மாநகராட்சியில் மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் முற்றிலுமாக நிறைவேறிடவும், தமிழகத்திலேயே சிறந்த மாநகராட்சியாக தூத்துக்குடி மாநகராட்சியை மாற்றி காட்டிடவும் மாநகர மக்களான நீங்கள் பா.ஜக வேட்பாளர் ஜெயலட்சுமியை வெற்றி பெற செய்யுங்கள் என்றார். பிரசாரத்தின்போது, பா.ஜ.க மாவட்ட பொதுச்செயலாளர் கவுன்சிலர் பிரபு, மாவட்ட தலைவர் கனகராஜ், செயலாளர் தேவகுமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், மதிமுக நகர செயலாளர் தனபால்ராஜ், மாநகர துணை செயலாளர் மகேஷ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பொன்னுச்சாமி, ஒன்றிய செயலாளர் வள்ளிக்கண்ணு,
ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் கண்ணுச்சாமிபாண்டியன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.