மீனவர் பிரச்சினையில் பாஜக அரசு நடவடிக்கை எடுக்குமாம்.. சொல்கிறார் பொன். ராதா
சென்னை: தமிழக மீனவர்கள் பிரச்சினை, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்தியில் அமையும் புதிய பாஜக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தமிழகத்திலிருந்து பாஜக சார்பில் ஒண்டியாளாக வெற்றி பெற்றுள்ள மாநில பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கன்னியாகுமரியில் போட்டியிட்டு வென்றுள்ள பொன். ராதாகிருஷ்ணன் இன்று சென்னைக்கு வந்தார். அவருக்கு பாஜகவினர் விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். பொன். ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சர் ஆவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பொன். ராதாகிருஷ்ணன் பேசுகையில், இலங்கை தமிழர்கள், மீனவர்கள் பிரச்னையில் பாஜக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். அதேபோல், நதிநீர் பிரச்னையிலும் பாஜக அரசு தீர்வு காணும்.
நாடாளுமன்றத் தேர்தலின்போது அமலில் இருந்த 144 தடை உத்தரவை சில அரசியல் கட்சிகள் சாதகமாக பயன்படுத்திக் கொண்டன. நரேந்திர மோடி அலையால் தான் தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றியது. அமைச்சர்கள் நியமனத்தை பாஜகவின் மேலிடம் முடிவு செய்யும் என்றார் அவர்.