சி.ஏ.ஏ, என்.ஆர்.சி... முழுமையான பாஜக ஆதரவு நிலைப்பாடு.. பக்காவாக ட்யூனாகி விட்ட ரஜினிகாந்த்
Recommended Video
சென்னை: தனக்கு யாரும் காவி சாயம் பூசமுடியாது என்று கூறிய அதே ரஜினிகாந்த் அப்படியே பாஜகவின் குரலாக தமது கருத்துகளை வெளிப்படையாகவே தெரிவித்து வருகிறார்.
அரசியல் கட்சி தொடங்கப் போவதாக ரஜினிகாந்த் அறிவித்தது முதல் அவரது சில நிமிட நேர செய்தியாளர் சந்திப்பு ஒவ்வொன்றும் ஏதாவது ஒருவகையில் சர்ச்சையாகிவிடுவது வழக்கம். அது சென்னை விமான நிலையமாகட்டும், அல்லது போயஸ் கார்டனில் வீட்டுக்கு வெளியே நடுத்தெருவில் செய்தியாளர்களை நிற்க வைத்து பேசுவதாகட்டும், அவரது ஒவ்வொரு சந்திப்பிலும் ஏகப்பட்ட ட்விஸ்டுகள்..
ரஜினி... தொடரும் தெருவோர பேட்டிகள்.. எப்ப சார் வீட்டுக்குள் கூப்பிடுவீங்க.. ஏக்கத்தில் நிருபர்கள்
ரஜினியின் தடாலடி பேட்டி
இப்படித்தான் ஒரு செய்தியாளர் சந்திப்பில் தமக்கு காவி சாயம் பூச சிலர் முயற்சிக்கிறார்கள்; நான் எந்த சாயத்திலும் சிக்கமாட்டேன் என தனக்கே உரிய சிரிப்புடன் நகர்ந்து சென்றார். ஆனால் துக்ளக் ஆண்டு விழாவில் தந்தை பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசியது, பின்னர் இந்த பேச்சுக்காக மன்னிப்பு கேட்க முடியாது என்று சொன்னது எல்லாம் ரஜினியின் முந்தைய பேட்டிகளுக்கு நேர் எதிராக இருந்தது.
இந்துத்துவாவாதிகள் மகிழ்ச்சி
அதாவது மத்தியில் ஆளும் பாஜகவை சேர்ந்த ஒரு பிரமுகர் பேசினால் எப்படியான உடல்மொழியும் கருத்து மொழியும் வெளிப்படுமோ அதையே அப்படியே ரஜினிகாந்த் வெளிப்படுத்தியிருந்தார். இதனால் ரஜினிகாந்த் மிக கடுமையான எதிர்ப்பை சந்திக்க நேர்ந்தது. இன்னொரு பக்கம் பாஜகவுக்கு குரல் கொடுக்க தமிழகத்துக்கு சரியான தலைமை கிடைத்துவிட்ட மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் இந்துத்துவா கொள்கைவாதிகள்.
சிஏஏவுக்கு ஆதரவு
இப்போது அவர்களது நம்பிக்கையை அதிகப்படுத்தும் விதமாக சி.ஏ.ஏ., என்.ஆர்,சி குறித்து ரஜினிகாந்த் பேசியுள்ளார். ஒட்டுமொத்த நாடே சி.ஏ.ஏ., என்.ஆர்.சிக்கு எதிராக போராடி வருகிறது. ஆனால் இந்த இரண்டையும் தாம் திட்டவட்டமாக ஆதரிப்பதாக கூறியுள்ளார். அதேநேரத்தில் இந்தியாவில் இருந்து இஸ்லாமியர்களை வெளியேற்றினால் எதிர்ப்பேன் என்றும் எதிர்க்கட்சிகளுக்கு ஆறுதலாகவும் வார்த்தைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
ரஜினியின் பாஜக குரல்
அத்துடன் இல்லாமல், மாணவர்களை அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொள்வார்கள்; மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்றும் ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டிருக்கிறார். பாஜகவின் மூத்த தலைவர்களான பொன். ராதாகிருஷ்ணன், எச். ராஜா ஆகியோர் கூறி வந்த கருத்துகளை அப்படியே அச்சரம் பிசராமல் அழகாக வெளிப்படுத்தியுள்ளார் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த் பாஜக
இதனால் பாஜக முகாம் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறது. தம்பி வா ! தலைமை ஏற்கவா என்பது திராவிட கட்சிகளுக்கு மட்டும் சொந்தம் கிடையாது.. தலைவா! வா! தலைமை ஏற்கவா என்பது எங்களது குரல் என்கிற குதூகலத்தை பாஜக வெளிப்படுத்தும் வகையில் அக்கட்சியின் உண்மையான வாய்ஸாக உருமாறி இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.