தமிழகத்தில் பாஜகவுக்கு 19.5% வாக்கு வங்கி உள்ளது.. தமிழிசை "ஷாக்" தகவல்!
திருச்சி: தமிழகத்தில் பாஜகவுக்கு 19.5 சதவீத வாக்குகள் உள்ளன. எனவே தனித்துப் போட்டியிட முடியும். தேமுதிக கூட்டணிக்கு வராததால் எங்களுக்கு எந்த ஏமாற்றமும் இல்லை. உண்மையில் திமுக, காங்கிரஸ்தான் ஏமாந்து போய் விட்டன என்று கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன்.
திருச்சியில் நடந்த பாஜக நேர்காணலுக்கு வந்த டாக்டர் தமிழிசை அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் தமிழிசை பேசியதிலிருந்து:
முதல்வர் வேட்பாளரால் பிரச்சினை
தமிழகத்தில் 2014ம் ஆண்டு அமைக்கப்பட்ட தேசிய ஜனநாய கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் மீண்டும் ஒன்று சேரவேண்டும். யார் முதல்வர் என்ற பிரச்சினையால் கூட்டணி அமைவதில் தாமதம் ஏற்பட்டு விட்டது.
ஆசை இருக்கும்தானே
அந்தந்த கட்சிகளை சேர்ந்த தலைவர்கள்தான் முதல்வர்களாக வரவேண்டும் என்பது தொண்டர்களின் ஆசையாக இருக்கலாம். ஆனால் பொது நோக்கமான ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த எல்லா கட்சிகளும் மீண்டும் இணையவேண்டும் என்பது தான் எங்களின் வேண்டுகோளாகும்.
19.5 சதவீத வாக்குகள் உள்ளன
முதல்வர் வேட்பாளர் என்பது ஒரு பிரச்சினை அல்ல. பல மாநிலங்களில் நல்லாட்சி நடத்துவதுபோல் தமிழகத்திலும் நல்லாட்சியை தர பாஜக திட்டமிட்டுள்ளது. பாஜகவுக்கு தமிழகத்தில் 19.5 சதவீத வாக்கு வங்கி உள்ளது.
தனித்து நிற்க ரெடிதான்
எனவே நாங்கள் தனித்து நிற்கவும் தயார்தான். ஆனால் எதிர் வாக்குககள் சிதறிவிடக்கூடாது என்பதற்காகத்தான் தேசிய ஜனநாயக கூட்டணி தொடரவேண்டும் என்று கூறுகிறோம்.
அவங்களுக்குத்தான் ஏமாற்றம்
தேமுதிக தனித்து போட்டியிட போவதாக அறிவித்தது தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்குத்தான் ஏமாற்றத்தை தந்துள்ளது. பாஜகவுக்கு அல்ல. டெல்லியில் வருகிற 19 மற்றும் 20 தேதிகளில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தமிழக தேர்தலுக்கான வழிகாட்டுதல், திட்டங்கள் அறிவிக்கப்படும். தமிழக தேர்தலுக்கு இந்த கூட்டம் ஒரு பக்கபலமாக அமையும்.
டைம் இருக்கு
தமிழகத்தில் தேர்தல் நடைபெற கால அவகாசம் இருப்பதால் மற்ற 4 மாநில தேர் தல் பணிகளில் தேசிய தலைவர்கள் கவனம் செலுத்தி வருகிறார்கள். தமிழக தேர்தல் பிரசாரத்திற்கு பிரதமர் மோடியும், கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவும் வருகை தர உள்ளனர் என்றார் அவர்.
அவசரப்பட முடியாது
இந்த நிலையில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசுகையில், அதிமுக, திமுக, காங்கிரஸ் என எல்லா கட்சிகளும் தனித்து போட்டியிடத் தயார் என்று சொன்னால் பாஜகவும் தயார். இது கூட்டணிக்கான காலம். ஆகவே தனித்து போட்டியிடுவதற்கான முடிவை உடனே எடுத்துவிட முடியாது என்றார் அவர்.