ஜெ. விடுதலைக்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை: தமிழிசை
கன்னியாகுமரி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுதலையானதற்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் எந்த தொடர்புமில்லை என்று அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தக்கலை அருகே உள்ள குமாரபுரம் பூவங்காபறம்பு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் 5008 பொங்கல் விழாவை தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதாவின் விடுதலைக்கும், பாஜகவிற்கும் தொடர்பு தொடர்பு இருப்பதாக கூறுவது வெறும் ஊகமே என்றார்.
ஒரு வழக்கில் தலையிடும் பழக்கம் பா.ஜ.க.வுக்கு இல்லை. ஜெயலலிதா வழக்குக்கும், தீர்ப்புக்கும், பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் முதல்வராக பதவியேற்க ஜெயலலிதாவிற்கு நிம்மதி கிடைத்திருப்பது போல் தமிழக மக்களுக்கும் நிம்மதி கிடைக்க வேண்டும். இனியாவது தமிழகம் ஊழல் இல்லாத மாநிலமாக இருக்க வேண்டும்.
ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்ட வழக்கில், கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யாவிட்டால் தான் மேல்முறையீடு செய்யப் போவதாக சுப்பிரமணியசாமி கூறியிருப்பது அவரது சொந்த கருத்து என்றும் தமிழிசை கூறினார்.
2016 சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்று இன்னும் முடிவு எடுக்கவில்லை. தேர்தல் நேரத்தில் தேசிய தலைமையுடன் இணைந்து கூட்டணி குறித்து முடிவு எடுப்போம் என்று கூறிய அவர், தமிழகத்தில் பாஜக 40 லட்சம் உறுப்பினர்களை சேர்த்துள்ளது. இன்னும் 3 மாதத்தில் மக்கள் தொடர்பு இயக்கம் நடத்த உள்ளோம் என்றார்.