நாங்களும் பச்சை திராவிடன்.. திராவிட கட்சியே.. பாஜகவை பதறவிட்ட தமிழகம்
தமிழகத்தில் காலூன்றுவதற்கு இப்போது திராவிட முழக்கத்தை கையில் எடுத்திருக்கிறது பாஜக.
Recommended Video
சென்னை: தமிழகத்தில் எப்படியாவது காலூன்ற வேண்டும் என்பதற்காக பாஜக இப்போது தம்மை திராவிட கட்சி என்றும் பாஜகவினர் திராவிடர்கள் என்றும் புதிய முழக்கத்தை முன்வைத்து பதறுவதை பெரும் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூரில் அண்மையில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின், பாஜகவினரை களவாணிப் பசங்களா, புறம்போக்குகளா என விமர்சித்திருந்தார். புறம்போக்குகளாகிய நீங்கள் பேசுவதற்கும் மேடை அமைத்து கொடுத்தது திராவிட மண் எனவும் சாடியிருந்தார்.
ஸ்டாலினின் இந்த உக்கிர பேச்சு விவாத பொருளாகிப் போனது. இதையடுத்து மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் திடீரென நானும் பச்சை திராவிடன்; பாஜகவும் திராவிட கட்சியே என பேசியிருந்தார். இதை முன்மொழிந்து பாஜகவினரும் இப்போது தங்களை திராவிடர்கள்; திராவிட கட்சி என பேச தொடங்கியிருக்கின்றனர்.
வேற்று இன கட்சி
இந்துத்துவா கொள்கையை பேசும் பாஜக, தமிழகத்தைப் பொறுத்தவரையில் வட இந்தியா கட்சியாகவே பார்க்கப்படுகிறது. பாஜகவில் என்னதான் தமிழர்கள் இருந்தாலும் கூட அது ஒரு சமூகத்தின் கட்சியாகத்தான் தமிழகம் பார்க்கிறது. காலங்காலமாக தங்களை அடக்கி ஒடுக்கி வைத்த ஒரு வேற்று இனத்தவரின் கட்சி என தமிழகம் பார்ப்பதால் அதை அன்னிய பொருளாகவே பார்த்து ஒதுக்கி வைக்கிறது.
வன்முறைகளை தூண்ட சதி
மத்தியில் பாஜக ஆட்சியை பயன்படுத்திக் கொண்டு தமிழகத்தில் நுழைவதற்கு அனைத்து வேலைகளையும் இப்போதும் பாஜக செய்து வருகிறது. வட இந்தியாவைப் போல தமிழகத்தில் மதவன்முறைகளைத் தூண்டுவதற்கு சிறு சிறு சந்தர்ப்பங்களையும் பாஜகவின் எச். ராஜா போன்றோர் தீவிரமாக முயற்சிக்கின்றனர். ஆனால் திராவிட இயக்கத்தால் பண்பட்ட இந்த மண், இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் கடந்து செல்கிறது.
பாடம் கற்ற திமுக
பாஜகவின் பினாமி கட்சி என்பதால் அதிமுகவையும் பாஜகவை மென்மையாக அணுகுகிறது என்பதற்காக திமுகவையும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தோற்கடித்தனர் வாக்காளர்கள். இந்த தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொண்ட திமுக, இப்போது மீண்டும் பாஜக எதிர்ப்பு அரசியலை தீவிரமாக பேசுகிறது.
பாஜக பயங்கர பல்டி
இதனால் பதறிப் போன பாஜக வேறுவழியே இல்லாமல், நாங்களும் திராவிடர்கள்தான்.. எங்க கட்சியும் திராவிட கட்சியும்தான் என பசப்பு வார்த்தைகளால் பேசுகிறது. சொல்லும் செயலும் திராவிடத்துக்கு எதிராக... தமிழகத்துக்கு எதிராக இருக்கிறது என்பதாலேயே ஒதுக்கி வைக்கப்பட்ட பாஜக இப்போது எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதற்காக லைட்டாக திராவிடத்தையும் சாப்பிட்டுப் பார்க்க துடிக்கிறது.
நகைப்புக்குரிய பாஜக
இதுநாள் வரை திராவிடம் என்பதே கிறிஸ்துவ மிஷினரிகளின் கற்பனை; ஆழ்வார்களும் நாயன்மார்களும் அவதரித்த ஆன்மீக பூமி என கம்புசுற்றிய பாஜகவினர் இப்போது திராவிடத்தை தூக்கிப் பிடிப்பதைப் பார்க்கும் போது... அய்யோ பாவமே... என பரிதாபம்தான் ஏற்படுகிறது. திராவிடம் என்றாலே பீதியடைந்து கிடந்த பாஜக வகையறாக்கள் இப்போது அதே திராவிடத்தை முதுகில் சுமக்க தொடங்கியிருப்பது நகைப்பைத்தான் தருகிறது.