கர்நாடகத்தில் காவிரியை வைத்துதான் ஓட்டுவாங்கும் நிலையில் பாஜக இல்லை: தமிழிசை செளந்தரராஜன்
காவிரியை வைத்து அரசியல் செய்ய வேண்டிய நிலை பாஜகவிற்கு இல்லை என்று தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் : கர்நாடகத் தேர்தலை மனதில் வைத்துத்தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை மத்திய அரசு தாமதப்படுத்துகிறது என்கிற குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது. அப்படி ஒரு நிலை பாஜகவிற்கு ஏற்படாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் தமிழிசை செளந்தரராஜன் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் விதித்த கெடு முடிய இன்னும் மூன்று நாட்கள் அவகாசம் உள்ளது. நிச்சயம் அதற்குள் மத்திய அரசு நல்ல முடிவை அறிவிக்கும் என்று தெரிவித்தார்.
மேலும், காவிரி விவகாரத்தில் நான்கு மாநிலங்கள் சம்பந்தப்பட்டுள்ளன. எனவே, அம்மாநிலங்களுக்குள் உள்ள பிரச்னைகளை கருத்தில்கொண்டு, எதிர்காலத்தில் எந்த வித குழப்பமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதாலேயே மத்திய அரசு இந்த விவகாரத்தை பொறுமையாகக் கையாளுகிறது.
அதற்குள் தேவையில்லாத களங்கம் கற்பிப்பதை மற்ற கட்சிகள் கைவிடவேண்டும். காவிரி விவகாரத்தில் எந்தக்குழு அமைத்தாலும், நிச்சயம் தமிழகம் அதனால் வஞ்சிக்கப்படாது. தேவையில்லாமல் எதிர்க்கட்சிகள் இதனை அரசியலாக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும், கர்நாடக சட்டசபைத் தேர்தலை மனதில் வைத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை மத்திய பாஜக அரசு தாமதப்படுத்துகிறது என்று சொல்லுவது முற்றிலும் பொய். கர்நாடகத்தில் காவிரியை வைத்து அரசியல் செய்ய வேண்டிய நிலை பாஜகவிற்கு இல்லை. அங்கு பாஜக வலுவாகவே உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தடையில்லை என தலைமை தேர்தல் ஆணையம் கூறியிருப்பது ஆரோக்கியமான விஷயம் என்றும் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.