சமூகநீதியை ஒழித்து சங்பரிவாரின் பாசிச ஆட்சியைக் கொண்டு வர பாஜக திட்டம்: வைகோ
சமூகநீதியை ஒழித்து சங்பரிவாரின் பாசிச ஆட்சியைக் கொண்டு வர பாஜக திட்டம் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை : மத்திய அரசின் இணைச் செயலாளர் பதவிகளில் ஐ.ஏ.எஸ் தேர்வின்றி வெளியாரை நியமிக்க பாஜக அரசு முடிவு செய்துள்ளது. இது சமூக நீதியை ஒழித்து சங்பரிவாரின் பாசிச ஆட்சியைக் கொண்டு வரும் பாஜக திட்டம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் இணைச் செயலாளர் பதவிக்கு ஐ.ஏ.எஸ் தேர்வின்றி வெளி ஆட்களை நியமிக்க பாஜக அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக தனியார் நிறுவனங்கள், மத்திய அரசு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில், 3 முதல் 5 ஆண்டுகள் பணி வழங்கப்படும் என்றும், தேர்வு செய்யப்படுபவர்கள் மத்திய அரசின் இணைச் செயலாளர்களாக பதவி வகிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில், இத்தனை ஆண்டுகளாக இருந்த நடைமுறையை பாஜக அரசு மாற்றியுள்ளது. இதன் மூலம் சமூக நீதியை ஒழித்து சங்பரிவாரின் பாசிச ஆட்சியைக் கொண்டு வர பாஜக அரசு முயற்சிக்கிறது.
இதை சமூக நீதியின் மீது அக்கறை கொண்டோர் அனைவரும் எதிர்த்துப் போராட வேண்டும். இல்லாவிட்டால், இந்த முயற்சியில் பாஜக வெற்றி பெற்றுவிடும் என்று தெரிவித்துள்ளார்.