சுவாதி விவகாரம்: சென்னையில் ஹெச். ராஜா கொடும்பாவியை எரித்த விடுதலைச் சிறுத்தைகள்
சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனை தொடர்ந்து அவதூறாக பேசிவருவதாக கூறி பாஜக தேசிய செயலர் ஹெச். ராஜாவின் கொடும்பாவியை அக்கட்சி தொண்டர்கள் சென்னையில் எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சுவாதி கொலை வழக்கில் அதிர வைக்கும் பல தகவல்களை திருமாவளவன் வெளியிட்டு வருகிறார். தற்போது ஜாதி ஆணவக் கொலையாக இருக்கலாம் எனவும் திருமாவளவன் கூறி வருகிறார்.
திருமாவளவனின் இக்கருத்துகளை பாஜக தேசிய செயலர் ஹெச். ராஜா தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதனைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி திருவள்ளூர் மாவட்ட செயலாளர் கெளரி சங்கர் தலைமையில் இன்று காலை கொரட்டூர் டி.வி.எஸ். லூக்காஸ் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ஹெச். ராஜாவின் கொடும்பாவியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் எரித்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் எரிந்து கொண்டு இருந்த ஹெச்.ராஜா கொடும்பாவியை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.