சென்னை வந்த ஜவடேகர்.. பிரேமலதாவுடன் சந்திப்பு.. ஜவடேகர் வந்தது தெரியாது என்கிறார் பொன்.ராதா!
சென்னை: தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளரும்,மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர் இன்று திடீரென சென்னை வந்தார். அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் வந்ததாக கூறப்பட்ட நிலையில் அவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேலமதாவை சந்தித்துப் பேசியுள்ளார்.
ஜவடேகர் வருகை குறித்து இன்று பெரும் குழப்பமாகி விட்டது. அவர் வந்தார் என்று சில தகவல்களும், வரவில்லை என்று சில தகவல்களும் மாறி மாறி வந்து குழப்பத்தை ஏற்படுத்தி விட்டன.
ஆனால் உண்மையில் ஜவடேகர் சென்னை வந்திருந்தார். இன்று காலை சென்னை வந்த அவர் அண்ணா பல்கலைக்கழக சுற்றுச்சூழல் கருத்தரங்கில் கலந்து கொண்டதாக அவரே தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஆனால் அவர் சொல்லாத இன்னொரு விஷயம், பிரேலமதா விஜயகாந்த்தை சந்தித்தது. விஜயகாந்த் ரிஷிவந்தியம் கிளம்பிச் சென்று விட்டதால் பிரேமலதாவைச் சந்தித்துள்ளார் ஜவடேகர் என்று கூறப்படுகிறது. அப்போது இருவரும் கூட்டணி தொடர்பாக பேசியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து பாஜக தரப்பில் யாரும் உறுதிப்படுத்தவில்லை.
ஜவடேகர் சென்னை வந்துள்ளாரா என்று இன்று மாலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, அதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது என்று அவர் கூறினார்.
ஜவடேகர் வருகை குறித்து பொன். ராதாகிருஷ்ணனுக்குத் தெரிவிக்கப்படவில்லையா அல்லது அவர் இதுகுறித்து பேச விரும்பவில்லையா என்று தெரியவில்லை.
மொத்தத்தில் இன்று ஜவடேகர் வந்து கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திவிட்டுத்தான் டெல்லி சென்றிருக்கிறார். ஆனால் என்ன பேசப்பட்டது, என்ன நடந்தது என்பதுதான் மர்மமாக உள்ளது.