டுவிட்டரில் ஸ்டேட்டஸ் போடாமல் அரசியல் களத்துக்கு வாங்க கமல் - தமிழிசை நையாண்டி : வீடியோ
நடிகர் கமல் இணையத்தில் கருத்து சொல்லிக்கொண்டிராமல் நேரடி அரசியல் களத்துக்கு வர வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.
காரைக்குடி: கமல் டுவிட்டரில் கருத்துக் கூறிக்கொண்டிராமல் அரசியல் களத்துக்கு வர வேண்டும் என கமலுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை அழைப்பு விடுத்துள்ளார்.
கமல், அதிமுக அட்சியில் ஊழல் நடக்கிறது என கூறியதில் இருந்து அவரை தமிழக அமைச்சர்கள் ரவுண்டு கட்டி அடித்து வருகின்றனர். போதாக்குறைக்கு தமிழக பாஜக தலைவர்களும் அவரை விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைகொண்டு தேர்தலில் வெற்றிபெற்றுவிடலாம் என தப்புக் கணக்குப் போட்டுக்கொண்டு உள்ளார் என கடுமையாக விமர்சித்தார்.
அடுத்து, கமல், ரஜினி குறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழிசை ரஜினி, கமல் இருவரும் அரசியல் களத்துக்கு வந்து பிறகு கருத்து சொல்வது நல்லது. கமல் இணையதளங்களில் கருத்துச் சொல்லிக்கொண்டிருக்கிறார்.
அவர் ஒரு சினிமா நடிகராக இல்லாமல், இணையத்தில் கருத்துச் சொல்லிக் கொண்டிருக்காமல் அரசியல் களத்துக்கு நேரடியாக வந்து, நாங்கள் படும் துயரங்களை எல்லாம் அனுபவித்த பிறகு கருத்து சொல்ல வேண்டும் என கமலை நையாண்டி செய்யும் விதமாகப் பதில் அளித்தார்.