பாஜகவின் வானதி ஸ்ரீனிவாசனின் கார் முற்றுகை...பிரதமரை எதிர்த்து கோஷமிட்டதால் பரபரப்பு!
சென்னை தீவுத் திடல் அருகே பாஜக பொதுச்செயலாளர் வானதி ஸ்ரீனிவாசனின் காரை மறித்து சிலர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை : சென்னை தீவுத் திடல் அருகே பாஜகவைச் சேர்ந்த வானதி ஸ்ரீனிவாசனின் காரை மறித்து சிலர் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்களிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாஜகவின் பொதுச் செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் வெளியூரில் இருந்து சென்னை வந்துள்ளார். சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த அவர் தன்னை அழைத்து செல்ல கார் வராததால் அங்கேயே காத்திருந்தார்.
இதனிடையே வானதியின் கார் சுமார் அரைமணி நேரம் தாமதமாக வந்துள்ளது. கார் வந்ததும் அதில் ஏறிய வானதி தனது ஓட்டுனரிடம் கார் வர ஏன் தாமதமானது என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது வானதியின் கார் ஓட்டுனர் கோபிநாத், தீவுத்திடல் அருகில் வந்தபோது அங்கு திரண்டிருந்தவர்களில் சிலர் காரில் பா.ஜனதா கொடி கட்டப்பட்டிருந்ததை பார்த்ததும் வழிமிறித்து போராட்டம் நடத்தினர். பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டதாகவும் இதனையடுத்து திருவல்லிக்கேணி போலீசாரிடம் புகார் அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து கொந்தளித்துள்ளார் வானதி ஸ்ரீனிவாசன். ஆளில்லாத காரையே வழிமறித்து இப்படி போராடியிருக்கிறார்களே, ஒரு வேளை காரில் நான் இருந்திருந்தால் தாக்க கூட முயற்சித்திருப்பார்கள் என்று குற்றம்சாட்டியுள்ளார்.