ரஜினி வந்தால் கூடுதல் பலம்... இன்னும் விடாமல் தொங்கும் பாஜக!
ரஜினியின் வருகைக்காக பாஜக தலைவர்கள் காத்துள்ளனர் என்பது அவர்களின் கருத்துகளில் இருந்து வெளிப்பட்டு வருகிறது.
சென்னை: ரஜினி வந்தால் பாஜகவுக்கு கூடுதல் பலம், அவருக்காக பாஜகவின் கதவுகள் திறந்தே இருக்கின்றன என பாஜக தலைவர்கள் ரஜினிக்கு வலை விரித்தப்படியே உள்ளனர். பாஜக தலைவர்களின் கோரிக்கைகளை ரஜினி சட்டை செய்யாமல் இருந்தாலும் அவர்கள் விடாமல் தொங்கி வருகின்றன.
ரஜினியின் படையப்பா படத்திற்கு பின்னர் அவர் எப்போது அரசியலுக்கு வருவார் என்ற எதிர்ப்பார்ப்பு அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அரசியல் கட்சிகளிடையேயும் ஏற்பட்டது. ஆனால் ரஜினிகாந்தோ அவ்வப்போது தனது ரசிகர்களை சந்திக்கும் போதெல்லாம் அரசியலுக்கு வருவது கடவுள் கையில் தான் உள்ளது என தெளிவான பதிலைச் சொல்லாமல் குழப்பி வருகிறார்.
இந்நிலையில் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு தமிழக அரசியலில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் அவர் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம் என அவரது நெருங்கிய வட்டாரங்கள் ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது.
ஸ்ட்ராங்க் ஸ்பீச்
இந்நிலையில் கடந்த வாரம் 5 நாட்கள் தனது ரசிகர்களுடன் ரஜினிகாந்த் தனது ரசிகர் பெருமக்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் தனது அரசியல் பிரவேசம் குறித்து அரசல் புரசலாக பேசிய ரஜினி இறுதி நாள் நிகழ்ச்சியில் சற்று ஸ்ட்ராங்காகவே, தயாராக இருங்கள் போர் வரும் போது பார்த்துக்கொள்ளலாம் என்றார்.
அரசியல் களத்தில் பரபரப்பு
அவரது இந்தப் பேச்சு தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு வரவேற்பும் எதிர்ப்பும் வலுத்துள்ளது.
துண்டுபோடும் தேசியக் கட்சிகள்
இதைத்தொடர்ந்து ரஜினி தங்கள் கட்சியில் தான் சேர வேண்டும் என தேசியக் கட்சிகள் துண்டுபோட்டு வருகின்றன. ரஜினியின் வருகைக்காக பாஜகவின் கதவுகள் திறந்தே இருக்கின்றன என பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இழுக்க முயற்சிக்கும் பாஜக
இதேபோல் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவும் ரஜினி சிறந்த நடிகர், மோடி ஒரு சிறந்த பிரதமர். ஆகையால் இருவரும் சேர்ந்து செயல்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். தேசிய தலைவர்கள் ஒருபக்கம் ரஜினியை இழுக்க முயற்சிக்க தமிழக பாஜக தலைவர் தமிழிசையும் அவர்களுக்கு ஒத்துஊதி வருகிறார்.
அறிவிக்காத ரஜினி
ரஜினி பாஜகவுக்கு வந்தால் கூடுதல் பலம் என அவர் தெரிவித்துள்ளார். ரஜினி இதுவரை தேசிய கட்சியில் இணைவதா அல்லது தனிக்கட்சி தொடங்குவதா என அறிவிக்கவில்லை.
வளைத்து போட்டுவிட வேண்டும்
ஆனால் அவரை எப்படி வளைத்து போட்டுவிட வேண்டும் என பாஜக விடாமல் தொங்கி வருகிறது. ஆனால் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் ரஜினி தனிக்கட்சிதான் தொடங்குவார் என, பாஜகவுக்கு செல்லும் முன்பே முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.
எப்போது கிடைக்கும் முடிவு
பாஜகவின் எதிர்ப்பார்ப்பு, காங்கிரஸின் கணிப்பு, ரசிகர்களின் கனவு என அனைத்திற்கும் ரஜினியின் முடிவுதான் பதிலாக இருக்கும். ஆகையால் அவர் எப்போது தனது தெளிவான முடிவை அறிவிப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.