கட்டிப்புடுச்சுடுவோம்னு பயந்து பாஜகவினர் 2 அடி தள்ளியே நிக்கறாங்க- ராகுல் ஜோக்
கட்டிப்புடுச்சுடுவோம்னு பயந்து கொண்டு பாஜகவினர் 2 அடி தள்ளியே நிற்கிறார்கள்எ என்று ராகுல் கிண்டல் செய்தார்.
சென்னை: கட்டிப்பிடித்து விடுவோம்னு பயந்து கொண்டு பாஜகவினர் 2 அடி தள்ளியே நிற்கிறார்கள் என்று ராகுல் காந்தி கிண்டல் செய்தார்.
மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது. அப்போது அதன் மீது விவாதம் நடைபெற்றது.
இந்த விவாதத்தின் மீது ராகுல் காந்தி பேசியிருந்தார். அப்போது அவர் பேசி முடித்தவுடன் ராகுல்காந்தி பிரதமர் மோடியை கட்டிபிடித்தார். இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து பட்டிமன்றம் நடத்தும் அளவுக்கு விவாதம் நடத்தப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து டெல்லியில் புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்த அவர் கூறுகையில் நான் பிரதமரை கட்டி அணைத்தது எந்தளவுக்கு வொர்க் ஆகியுள்ளது என்பதை பார்க்கும் போது ஆச்சரியமாக உள்ளது.
ஏனென்றால் நான் பாஜக எம்பிக்களை கடந்து செல்லும் போது அவர்கள் இருஅடி தள்ளியே நிற்கிறார்கள். அதை பார்க்கும் போது நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நம்மையும் கட்டிப்பிடித்து விடுவார் என்ற அர்த்தத்தை நமக்கு கொடுக்கிறது என்றார் ராகுல். இதை கேட்டவுடன் பத்திரிகையாளர்கள் குபீரென்று சிரித்து விட்டனர்.