நீட் தேர்வு குறித்து பாஜக தலைவர்கள் பேசுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறது : முத்தரசன்
நீட் தேர்வு குறித்து பாஜக தலைவர்கள் பேசுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வால் அடுத்தடுத்து மாணவர்கள் மரணம் நிகழும் நேரத்தில், பாஜக தலைவர்களின் பேச்சு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வில் தோல்வி அடைந்ததை அடுத்து, தமிழகத்தில் அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் நீட் ரத்து கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசியல் கட்சிகள் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மத்திய அரசு தலையீடு
அந்த அறிக்கையில், ‘நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்களிக்கக் கோரி பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்தக் கோரிக்கையைஒட்டுமொத்த தமிழகமும் ஒரே குரலில் வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட சட்டத்திருத்த மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி ஓராண்டுக்கும் மேலாகி விட்டது. இதுவரை குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நீட் தேர்வால் பாதிப்பு
தமிழக மக்களின் உணர்வுகளை நிராகரித்து மாநில உரிமையை பறித்து, சட்டப்பேரவைத் தீர்மானத்தை அலட்சியப்படுத்தி செயல்படும் மத்திய அரசின் வஞ்சப்போக்கை எதிர்த்துப் போராடும் திராணியற்ற தமிழக அரசு, நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து சிறிதும் கவலைப்படாத போக்கில் செயல்படுகிறது. இதன் விளைவாக தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள், பெற்றோர்களின் விலைமதிக்க முடியாத உயிர்கள் பறிபோகின்றன.
நலம் பெற வேண்டும்
அரியலூர் அனிதா, தொடர்ந்து விழுப்புரம் பிரதீபா, இன்று திருச்சி மாவட்டத்தில் சுபஸ்ரீ, பிள்ளைகளின் பாதிப்பால் மன உளைச்சலுக்கு ஆளான மூன்று பெற்றோர்கள் என உயிர்பலி தொடர்கின்றன. விழுப்புரம் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் கீர்த்தி நலம் பெறவேண்டும் என விரும்புகிறோம். மரணங்கள் தொடரும் நிலையில் மத்திய பாஜக தலைவர்கள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று, நீட் நுழைவுத் தேர்வை நியாயப்படுத்தி வருவது கண்டனத்திற்குரியது.
உயிர்பலி வேண்டாம்
தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறவும், நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களித்து தமிழக மாணவர்கள், பெற்றோர்கள் உயிர்களை காக்கவும் மத்திய, மாநில அரசுகள் விரைந்து முன்வர வேண்டும் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.