கோழைகள் போல இரவில் குண்டு வீசுவதா?... இனி அவர்களுக்கு கை இருக்காது - தமிழிசை
தமிழகத்தில் இனி பாஜகவினர் மீது யாரேனும் தாக்குதல் நடத்தினால் அவர்களுக்கு கை இருக்காது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
Recommended Video
கோவை: கோழைகள் போல இரவு குண்டு வீசுகிறார் என்று கூறியுள்ள தமிழிசை சவுந்தரராஜன், பாஜகவினர் மீது குண்டு வீசுபவர்களுக்கு கை இருக்காது என்று எச்சரித்துள்ளார்.
கோவை பாஜக மாவட்ட தலைவர் வீட்டில், பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை கண்டித்து, தமிழிசை சவுந்தர்ராஜன் தலைமையில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், சாது மிரண்டால் காடு கொள்ளாது என்றார்.
பாஜகவினர் மீதான தாக்குதல் இனி நடைபெறக் கூடாது கடந்த 7ஆம் தேதி குண்டு வீசியபோதே, போலீஸார் நடவடிக்கை எடுத்திருந்தால், தற்போது தாக்குதல் நடந்திருக்காது, என்றும் தெரிவித்தார்.
குண்டு வீசினால் கை இருக்காது
ஆர்பாட்டத்தில் ஆக்ரோசமாக பேசிய தமிழிசை, நீங்கள் குண்டு வீசிக்கொண்டே இருப்பீர்கள் நாங்கள் பார்த்துக்கொண்டே இருப்போமா? இனி அப்படி இருக்க மாட்டோம். குண்டு வைப்பவர்களுக்கு இரு கை இருக்காது. சாது மிரண்டால் காடு தாங்காது என்பது போல பாஜகவினர் பொங்கி எழுந்தால் தமிழகம் தாங்காது என்றார். பாஜகவினர் அதிகம் தாக்குதலுக்கு ஆளாவதாகவும் அவர் கூறினார்.
இனி காலம் தாழ்த்தினால்
காவல்துறையினர் இந்த விவகாரத்தில் தொடர்ந்து மெத்தன போக்கை கடைப்பிடித்து வருகிறார்கள். முதல் சம்பவம் நடந்தபோதே குற்றவாளிகளை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோன்ற வன்முறைகள் தொடர்ந்திருக்காது. இனியும் காவல்துறையினர் காலம் தாழ்த்தினால் அடுத்தக்கட்ட போராட்டம் மிகப்பெரிய அளவில் இருக்கும்.
ஒன்றும் செய்ய முடியாது
இரவு நேரத்தில் எங்கள் அலுவலகத்திலும், மாவட்ட தலைவர் வீட்டிலும் பெட்ரோல் குண்டு வீசிய கோழைகள் யாராக இருந்தாலும் இப்போது நேரில் வாருங்கள் என்று கூறிய அவர், எத்தனை குண்டுகள் வெடித்தாலும் பாஜக தொண்டனை ஒன்றும் செய்ய முடியாது. இது கருப்பு மண் அல்ல காவி மண் என்றும் கூறினார்.
தாக்குதல் நடக்கக் கூடாது
கடந்த 7ஆம் தேதி குண்டு வீசியபோதே, போலீஸார் நடவடிக்கை எடுத்திருந்தால், தற்போது தாக்குதல் நடந்திருக்காது, என்றும் கூறினார்.
தமிழகத்தில் ஆட்சி
தமிழகத்தில் ஆட்சியை பிடிக்காமல் விடமாட்டோம் என்று கூறிய தமிழிசை, நிச்சயம் இங்கு ராம ராஜ்ஜியம் மலரும் என்றும் தெரிவித்தார். மேலும், ஒரு பாஜக கவுன்சிலர் கூட இல்லாத திரிபுராவில், கடும் உழைப்பால் வெற்றி பெற்றதைப் போல், தமிழகத்திலும் ஆட்சியை பிடிப்போம் என்றும், இதனால் தான் மு.க.ஸ்டாலின் பயப்படுகிறார் என்றும் குறிப்பிட்டார். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தமிழகம் வஞ்சிக்கப்படாது என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.