ஃபேஸ்புக்கில் தொடர்ந்து கீழ்த்தரமான அவதூறு- பா.ஜ.க.வின் கல்யாண்ராமன் கைது- சிறையில் அடைப்பு!!
சென்னை: ஃபேஸ்புக்கில் திராவிடர் இயக்க, கட்சிகளின் தலைவர்கள், சிறுபான்மை இனத்தவர் மீது தொடர்ந்து கீழ்த்தரமான அவதூறுகளைப் பதிவிட்டு வந்த பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பிரமுகர் கல்யாண்ராமன் இன்று கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பா.ஜ.க.வைச் சேர்ந்த கல்யாண்ராமன் டி.வி. விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர். டி.வி. நிகழ்ச்சிகள் என்றும் பார்க்காமல் மிகவும் அவதூறாக கீழ்த்தரமாகப் பேசக் கூடியவர். அதேபாணியில் ஃபேஸ்புக்கிலும் பதிவிட்டு வந்தார்.
இவர் மீது சென்னை போலீசில் மனித நேய மக்கள் கட்சித் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா புகார் கொடுத்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் இன்று கல்யாண்ராமன் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து ஜவாஹிருல்லா தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
சிறுபான்மையினர், சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் மீது வெறுப்புப் பிரச்சாரத்தை செய்வதை முழு நேரத் தொழிலாக கொண்டிருக்கும் சங் பரிவாரைச் சேர்ந்த கல்யாண் ராமன் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கடந்த டிசம்பர 30 அன்று சென்னை மாநகர காவல் ஆணையாளர் திருமிகு டி.கே. ராசேந்திரன் இ.கா.ப. அவர்களிடம் நேரில் முறையிட்டோம்.
கல்யாண் ராமன் கடந்த டிசம்பர் 26 மாலை 6.01 மணிக்கு அவரது முகநூலில் அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி (ஸல்) அவர்களை தொடர்புபடுத்தி ஒரு அவதூறு பதிவுச் செய்திருந்தார். இதனை சுட்டிக் காட்டி நமது புகார் அளிக்கப்பட்டது.
நமது புகாரை விசாரித்த சென்னை மாநகர காவல்துறை அதன் அடிப்படையில் சென்னை சிட்லப்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு ஒன்றை பதிவுச் செய்து இன்று அதிகாலை கல்யாண் ராமனை கைது செய்து அவரை சென்னை புழல் மத்திய சிறையில் அடைத்துள்ளது.
கடந்த ஹஜ் புனித யாத்திரையின் போது மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ஒருவர் முகநூலில் அது குறித்து வெறுப்பு பிரச்சாரப் பதிவிட்டார். இது குறித்து திருமங்கலம் தமுமுக அளித்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். இப்போது மனிதநேய மக்கள் கட்சி அளித்த புகாரின் அடிப்படையில் கல்யாண்ராமன் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
முகநூலில் வெறுப்பு பிரச்சாரத்திற்கு இடம் இல்லை என்பதை உணர்த்திய தமிழக காவல்துறைக்கும் உரிய உத்தரவுகளை பிறப்பித்த தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முகநூலில் வெறுப்பு பிரச்சாரம் செய்வதை தொழிலாக கொண்டிருக்கும் அனைவருக்கும் இது ஒரு படிப்பினையாக இருக்கட்டும்.
இவ்வாறு ஜவாஹிருல்லா பதிவிட்டுள்ளார்.