புதுச்சேரி பட்ஜெட் இன்று தாக்கல்: சட்டசபைக்குள் நியமன எம்எல்ஏக்களுக்கு அனுமதி மறுப்பு- பதற்றம்
புதுச்சேரி சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் நியமன எம்எல்ஏக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி: சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் நியமன எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் அனுமதிக்க மறுத்துள்ளார். மீறி பேரவைக்குள் நுழைய முயன்ற 3 நியமன எம்எல்ஏக்களும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
யூனியன் பிரதேச அரசுகளுக்கான சட்டத்தின்படி, காங்கிரஸ் ஆட்சி செய்யும் புதுச்சேரி சட்டசபைக்கு பாஜகவைச் சேர்ந்த மாநிலத் தலைவர் வி.சாமிநாதன், பொருளாளர் கே.ஜி.சங்கர், கட்சியின் ஆதரவாளர் எஸ்.செல்வகணபதி ஆகிய 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்து, துணை நிலை ஆளுநர் கிரண் பேடி கடந்த 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டார்.
இந்த நியமன உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க சட்டப்பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் மறுத்ததையடுத்து, 3 பேருக்கும் ஆளுநர் கிரண் பேடியே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
புதுச்சேரி யூனியன் பிரதேச விதிகளின்படியும், அரசியல் சாசன சட்டத்தின்படியும் இந்த 3 நியமன எம்.எல்.ஏ.க்களின் பதவிப் பிரமாணம் தகுதி வாய்ந்த நபரால் மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறி, இந்த நியமனம் செல்லாது என்றும் இந்த 3 பேரை சட்டசபைக் கூட்டத்துக்கு அனுமதிக்க முடியாது என்றும் கடந்த ஆண்டு நவம்பரில் சட்டப்பேரவைத் தலைவர் அறிவித்ததாக பேரவை செயலாளர் உத்தரவிட்டார்.
சட்டசபை செயலாளரின் இந்த உத்தரவை எதிர்த்து, நியமன எம்.எல்.ஏ.க்களான சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகிய 3 பேர் சார்பிலும் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம் புதுச்சேரி சட்டப்பேரவைக்கு 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என தீர்ப்பளித்தது.
நியமன எம்.எல்.ஏ.க்களை நியமிக்கும் போது துணைநிலை ஆளுநர் அமைச்சரவையின் கருத்துகளைக் கேட்க எந்தவிதமான கட்டாயமும் இல்லை. அதேபோன்று, இந்த நியமன எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய சட்டசபைத் தலைவருக்கு எந்த அதிகாரமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே 3 நியமன எம்எல்ஏக்களை புதுச்சேரி சட்டப்பேரவையில் அனுமதிக்க இயலாது என சபாநாயகர் வைத்திலிங்கம் தெரிவித்து உள்ளார். சட்ட ஆலோசகர்களிடம் ஆலோசித்த பிறகே முடிவு செய்யப்படும், சபாநாயகரின் கருத்தை கேட்காமல் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என கூறினார்.
அதே நேரத்தில் சட்டசபை நிகழ்ச்சிகளில் பங்கேற்க போவதாக 3 நியமன எம்எல்ஏக்களும் அறிவித்ததால் ஏற்பட்டது. இதனால் புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டசபையில் ஆண்டின் முதல் சட்டசபைக்கூட்டம் ஆளுநர் இன்று தொடங்கியுள்ளது. இன்று காலையில் சட்டசபைக்குள் நுழைய முயன்ற எம்எல்ஏக்களை காவலர்கள் தடுத்து நிறுத்தி கேட்டை பூட்டினர். இதனால் காவலர்களுக்கும் நியமன எம்எல்ஏக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சாலையில் அமர்ந்த நியமன எம்எல்ஏக்கள் 3 பேரும் அவர்களின் ஆதரவாளர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் உருவானது.