நடிகைகளை நம்பி நாங்க இல்லை.. சொல்கிறார் பாஜக தமிழிசை
சென்னை: நடிகைகளை நம்பி பாரதிய ஜனதா கட்சி இல்லை என்று அக்கட்சியின் தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறுகையில்,
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், தேர்தல் பணிகளை தொடங்கி சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகிறோம். தற்போது கட்சியின் அடிப்படை அஸ்திவாரத்தை வலுப்படுத்தி, தேர்தல் மாளிகை எழுப்புவதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறோம்.
234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்துவிட்டோம். தேர்தல் அறிக்கை தயாரித்தல், விளம்பரங்கள் செய்தல் போன்ற பணிகள் உள்பட தேர்தல் பணிகளை38 பிரிவுகளாக பிரித்து இருக்கிறோம். 38 பிரிவுகளுக்கும் தனித்தனியே குழு அமைத்து பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக பா.ஜ.க.வில் ஏற்கனவே 9 லட்சம் பேர் உறுப்பினர்கள் உள்ளனர். சமீபத்தில் பஜாகவால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘மிஸ்டு' கால் திட்டத்தின் மூலம் 51 லட்சம் பேர் புதிதாக இணைந்துள்ளனர். புதிய உறுப்பினர்களை நேரடியாக தொடர்பு கொண்டு சந்தித்து வருகிறோம்.
தமிழகத்தில் கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்காக தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டது. இந்த கூட்டணியில் இருந்து அதிகாரபூர்மாக ம.தி.மு.க. மட்டுமே வெளியேறி உள்ளது. மற்ற கட்சிகள் திராவிட கட்சிகளை மட்டுமே எதிர்த்து வருகின்றன. அந்த வகையில் தே.மு.தி.க. தொடர்ந்து திராவிட கட்சிகளை எதிர்த்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சியில் அக்கறை காட்டாத திராவிட கட்சிகளை அகற்றுவதில் பா.ஜ.க.வுக்கும் பொறுப்பு இருக்கிறது.
அதே கடமை, பாஜக கூட்டணிக் கட்சிகளான தே.மு.தி.க, பா.ம.க, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட உளிட்டகட்சிகளுக்கும் உள்ளது. இதனை அந்தந்த கட்சியின் தலைவர்களும் நன்கு உணர்ந்தே இருக்கிறார்கள். எனவே, இந்த இணைந்த கூட்டணி, இணையற்ற கூட்டணியாக மாறி, வரக்கூடிய தேர்தலில் மிகப்பெரிய வெற்றியடையும் என்று நான் உணர்கிறேன்.
மத்திய அரசு திட்டங்களுக்கு தமிழக அரசு முறையான ஒத்துழைப்பு அளிப்பதில்லை. வரக்கூடிய தேர்தலில் எங்க்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் மத்திய அரசு திட்டங்கள் மக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை செய்யப்படும்.
காங்கிரஸ் கட்சி நடிகைகள் நக்மா, குஷ்புவை தேர்தல் பிரசாரத்தில் இறக்கி உள்ளனர். மற்ற கட்சிகளிலும் சினிமா நட்சத்திர பேச்சாளர்கள் உள்ளனர். சினிமா நட்சத்திரங்களை எப்போதும் நான் குறைத்து மதிப்பிட்டது கிடையாது. அதற்காக அதிகமாகவும் மதிப்பிட மாட்டேன். அவர்கள் பிரசாரத்துக்கு பலம் சேர்க்கிறார்கள். அறிமுகத்துக்கு தேவையாக இருக்கிறார்களே தவிர அவர்களால் தான் கட்சி வளர்கிறது என்று சொல்லிவிட முடியாது. நடிகர், நடிகைகளை நம்பி பா.ஜ.க. இல்லை. எந்த துறையினராக இருந்தாலும் பா.ஜ.க. வரவேற்கிறது.
காங்கிரஸ் கட்சியில் உள்ளது போல பா.ஜ.க.வில் கோஷ்டி பூசல் கிடையாது. கட்சியில் பல பிரிவுகள் இருக்கிறது. ஆனால் கட்சித் தலைவர்களிடையே இல்லை. பா.ஜ.க. என்றுமே ஜனநாயக ரீதியில் செயல்படும் கட்சி. சிலர் மாறுபட்ட கருத்துக்களை கூறலாம். அது அவர்களின் சொந்த கருத்து. அது கட்சியில் என்றுமே வேற்றுமையை உண்டாக்காது. நாங்கள் இணைந்தே பணியாற்றுவோம். இணையற்ற வெற்றியை பெறுவோம் என்றார்.