முத்துப்பேட்டை மீன் மார்க்கெட் அகற்ற கோரிக்கை.. உண்ணாவிரதம் அறிவித்த பாஜகவினர் கைது
முத்துப்பேட்டை மீன் மார்க்கெட்டை அகற்ற கோரி உண்ணாவிரதம் அறிவித்த பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.
Recommended Video
திருவாரூர்: போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள முத்துப்பேட்டை மீன் மார்க்கெட்டை அகற்ற வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்த பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முத்துப்பேட்டையின் பிரதானமாக தொழிலாக இருப்பது மீன் பிடிப்பதுதான். அதனால் ஏராளமானோரின் வாழ்வாதாரம் அப்பகுதியிலுள்ள மீன்மார்க்கெட் நம்பியே இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் சமீபகாலமாக மீன்மார்க்கெட்டுக்கு பாஜக சார்பாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆசாத் நகரில் உள்ள மீன் மார்க்கெட் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாகவும், அதனை அகற்ற வேண்டும் என்றும் பாஜகவினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மீன் மார்க்கெட் அகற்ற வலியுறுத்தி பாஜக சார்பில் முத்துப்பேட்டையில் இன்று உண்ணாவிரதம் இருக்க போவதாக பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து உண்ணாவிரதம் இருக்க போகும் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் உடனடியாக குவிக்கப்பட்டனர்.
மேலும் உண்ணாவிரதத்துக்கு முன்னதாகவே, பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர் பேட்டை சிவா ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர்களது வீடுகளுக்கே சென்று போலீசார் கைது செய்துள்ளனர். உண்ணாவிரதம் அறிவித்த பகுதிகளுக்கு வந்த சில பாஜகவினரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்துவிடாமல் அந்த பகுதியில் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.