ரேஷன் சரக்கு காலியாச்சி!! டாஸ்மாக் சரக்கு அமோகமாச்சி!! பருப்புடன் தமிழிசை தலைமையில் ஆர்ப்பாட்டம்
ரேஷன் கடைகளில் முறையாக உணவுப் பொருட்கள் வழங்கக்கோரி பா.ஜ.க மகளிரணி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை: ரேஷன் கடைகளில் பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருட்கள் சரிவர வழங்கப்படாததைக் கண்டித்து சென்னையில் பாஜக மகளிரணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கைகளில் பருப்புடன் தமிழக அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர்.
ரேஷன் கடைகளில் பருப்பு பாமாயில் உள்ளிட்டப் பொருட்கள் வழங்கப்படவில்லை என புகார் எழுந்தது. அரசு நிதி ஒதுக்காததே இதற்கு காரணம் என கூறப்பட்டது.
ஆனால் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் இதனை முற்றிலுமாக மறுத்தார். ரேஷன் கடைகளில் உணவுப்பொருட்கள் தட்டுப்பாடின்றி வழங்கப்படுகிறது என அவர் கூறினார்.
இந்நிலையில் ரேஷன் கடைகளில் பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் முறையாக வழங்கப்படாததைக் கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் உள்ளிட்ட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
கையில் பருப்பு பொட்டலங்களை ஏந்தியவாறு அவர்கள் தமிழக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். மேலும் ரேஷன் சரக்கு காலியாச்சி!! டாஸ்மாக் சரக்கு அமோகமாச்சி! போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் அவர்கள் கைகளில் ஏந்தியிருந்தனர்.