தமிழர் பண்பாட்டை ஒழித்து கட்ட முயற்சிக்கும் பாஜக... தமிழருக்கு பொதுவிடுமுறையே இருக்க கூடாதா?
தமிழருக்கு பொதுவிடுமுறை இருக்கக் கூடாது என்ற வெறியோடு மத்திய பாஜக அரசு செயல்படுகிறது. இதன்வெளிப்பாடாக பொங்கலுக்கு பொதுவிடுமுறையே இல்லை என அறிவித்திருக்கிறது மத்திய அரசு.
சென்னை: தமிழர் பண்பாட்டை ஒழித்து கட்டும் வேலையில் மத்திய பாஜக அரசு பகிரங்கமாக இறங்கியுள்ளது. தமிழர் திருநாளாம் பொங்கலுக்கு பொதுவிடுமுறையை ரத்து செய்திருப்பதன் மூலம் தமிழினத்துக்கு ஒரு பொதுவிடுமுறை கூட இல்லை என்கிற இழிநிலையை மத்திய பாஜக அரசு உருவாக்கியுள்ளது.
இந்தியாவின் நாடாளுமன்றம் ஓணம் பண்டிக்கைக்கு விடுமுறை விடப்படுகிறது. வட இந்தியர்கள் கொண்டாடும் சங்கராந்திக்கு பொதுவிடுமுறை உண்டாம்.
ஆனால் தமிழினத்தின் ஒரே ஒரு பண்பாட்டு திருவிழாவானா பொங்கல் திருநாளுக்கு இனி பொதுவிடுமுறையே இல்லையாம். தமிழர்களின் முதுகில் குத்தியே பழக்கப்பட்டுப் போன பாரதிய ஜனதா அரசின் இந்த நடவடிக்கை தமிழகத்தை கொந்தளிக்க வைத்திருக்கிறது.
பொங்கல் பண்டிகையை ஒட்டி நடைபெற்று வந்த ஏறு தழுவுதல் என்னும் ஜல்லிக்கட்டு தமிழரின் பண்பாட்டு அடையாளம். கடந்த 2 ஆண்டுகாலமாக இந்த பண்பாட்டு அடையாள நிகழ்வை நடத்தவிடாமல் மத்திய அரசு முடக்கி வைத்திருக்கிறது.
இப்போது பொங்கல் பண்டிகையையே ஒழிக்கும் வகையில் பொதுவிடுமுறை இல்லை என அறிவித்துள்ளது மத்திய பாஜக அரசு. அப்படியானால் தமிழ் இனத்துக்கு என ஒரு பொதுவிடுமுறையே இல்லையா? தமிழர்களுக்கு என ஒரு பண்பாட்டு அடையாளமே இல்லையா? என்ற கொந்தளிப்பை உருவாக்கியிருக்கிறது மத்திய பாஜக அரசு.
ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தமிழக இளைஞர்கள் ஆர்த்தெழுந்து எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இப்போது பொங்கல் பண்டிகையையே ஒழித்து தமிழர் தேசிய திருவிழாவை அழித்துவிட பாஜக கங்கணம் கட்டிக் கொண்டிருப்பது வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுகிற நடவடிக்கையே.