பழனியில் அதிமுக கொடி கம்பத்தில் பாஜக கொடி பறந்ததால் பரபரப்பு
பழனியில் அதிமுக கொடி கம்பத்தில் பாஜக கொடியும் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்: பழனி அருகே மானூர் பேருந்து நிலையத்தில் உள்ள அதிமுக கொடி கம்பத்தில் பாஜக கொடி இருந்ததால் அங்கு சலசலப்பு நிலவியது.
ஜெயலலிதா மறைந்த பிறகு, எடப்பாடி தலைமையிலான ஆட்சிக்கு பாஜக ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. ஆட்சியை தக்கவைத்து கொள்ள பாஜகவுக்கு அடிபணிவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி சொன்னதால்தான் இரு அணிகளும் இணைந்ததாகவும் நான் அமைச்சரவையில் இருக்க மாட்டேன் என்று சொன்னபோது மோடி கட்டாயப்படுத்தியதால்தான் துணை முதல்வர் பதவியை ஏற்றேன் என்றும் ஓ.பன்னீர் செல்வம் கூறியிருந்தார்.
எனினும் மக்கள் நலன்களுக்காகவே மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம் என்றும் எதிர்க்கட்சியினர் கூறுவது போல் அடிபணியவில்லை என்றும் அதிமுக தரப்பில் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மானூர் பேருந்து நிலையத்தில் உள்ள அதிமுக கொடி கம்பத்தில் பாஜக கொடி பறந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக அதிமுகவினர் புகாரின் பேரில் பாஜக கொடியேற்றிய மர்ம நபர்கள் குறித்து கீரனூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.