முதலில் புதுச்சேரி... அப்புறம் தமிழ் நாடு... பாஜகவின் பேராசை அரசியல் பிளான் இதுதான்
முதலில் புதுச்சேரியிலும் அடுத்து தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற அரசியல் கணக்கை அகில இந்திய பாஜக தலைமை போட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகி அரசியல் களத்தில் சூட்டை
புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜக ஆட்சியை அமைத்துவிட்டால் அதன் பிறகு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா என ஒவ்வொன்றிலும் ஆட்சிக் கட்டிலில் தாமரையை ஏற்றி அழகு பார்க்கலாம் என்று பாஜகவின் அகில இந்திய தலைமை மெகா பிளான் போட்டுள்ளது.
மத்தியில் ஆளும் கட்சியாக இருந்தாலும் பாஜக தென்மாநிலங்களில் போதிய அளவுக்கு வளரவில்லை. கடந்த காலங்களில் வட கிழக்கு மாநிலங்களிலும் இதே போன்ற நிலைதான் பாஜகவுக்கு இருந்தது.
ஆனால், இந்த கட்சி எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் இன்று அங்கு பாஜக ஆழமாக காலூன்றி விட்டது. அசாம், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடித்து விட்டது.
இதேபோல் தென் மாநிலங்களையும் தங்கள் வசப்படுத்த வேண்டும் என்று பாஜக திட்டமிட்டுள்ளது. தென் மாநிலங்களில் கர்நாடகாவில் மட்டும்தான் ஏற்கெனவே பாஜக ஆட்சியில் இருந்துள்ளது.
கர்நாடகாவில் மீண்டும் பாஜக
தற்போது கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடந்தாலும் வருகிற தேர்தலில் பாஜகவுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் உற்சாகத்தில் உள்ள பாஜக மற்ற தென் மாநிலங்களுக்கு குறிவைத்துள்ளது.
காங்கிரஸ் இல்லாத இந்தியா
காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி ஏற்கெனவே கூறியிருந்தார். இந்த அரசியல் மாற்றத்தை கொண்டு வரும் பொறுப்பை பாஜக தலைவர் அமித்ஷாவிடம் ஒப்படைத்துள்ளார். இதில் அமித்ஷா இப்போது மும்முரமாக இறங்கியுள்ளார்.
முதலில் புதுச்சேரி
தென் மாநிலங்களை ஒட்டுமொத்தமாக வளைப்பது முக்கிய திட்டமாக உள்ளது. இதற்கு அமித்ஷா தேர்ந்தெடுத்துள்ள இடம்தான் புதுச்சேரி. தென் மாநிலங்களில் கர்நாடகாவை தவிர்த்த மற்ற எந்த மாநிலத்திலும் உடனடியாக பாஜக ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பில்லை. ஆனால், புதுவையை பொறுத்தவரை பாஜக தீவிரமாக முயற்சித்தால் இப்போதே ஆட்சிக்கு வந்து விடலாம் என்ற நிலை உள்ளது.
காங்கிரஸ் ஆட்சிக்கு ஆப்பு
புதுவையில் ஆட்சி அமைக்க மெஜாரிட்டிக்கு 17 எம்.எல்.ஏ.க்கள் தேவை. இதை விட ஒரு எம்.எல்.ஏ. எண்ணிக்கைதான் காங்கிரசுக்கு அதிகமாக உள்ளது. எனவே, 2 பேரை அந்த அணியில் இருந்து இழுத்துவிட்டால் கூட காங்கிரஸ் மெஜாரிட்டியை இழந்து விடும். இப்படி செய்து காங்கிரஸ் ஆட்சியை அகற்றி விட்டு என்.ஆர். காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க பாஜக திட்டமிட்டு இருக்கிறது.
மெஜாரிட்டிக்கு அமித்ஷா பொறுப்பேற்பு
கடந்த 26-ந் தேதி பா.ஜனதா தலைவர் அமித்ஷா 2 நாள் சுற்றுப் பயணமாக புதுவை வந்தார். அப்போது ஜனாதிபதி தேர்தலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமித்ஷாவை சந்தித்தனர். புதுவையில் ஆட்சி மாற்றம் குறித்து நீங்கள் கவலைப்படாதீர்கள். உங்கள் தரப்பு மெஜாரிட்டிக்கு நான் ஏற்பாடு செய்கிறேன் என்று கூறி விட்டு சென்றுள்ளார்.
நியமன எம்எல்ஏக்கள்
அடுத்த ஓரிரு நாட்களிலேயே புதுவையில் நியமன எம்.எல்.ஏ.க்களாக பாஜகவைச் சேர்ந்த 3 பேரை நியமித்து விட்டனர். அடுத்ததாக காங்கிரஸ் அணியில் உள்ள ஒன்றிரண்டு எம்.எல்.ஏ.க்களை இழுப்பதற்கு தீவிர முயற்சி நடந்து வருகிறது. எனவே, எந்த நேரத்திலும் அவர்களை இழுத்து பாஜக ஆட்சி அமைக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
தொங்கலில் இருக்கும் தமிழ்நாடு
தமிழ்நாட்டில் ஏற்கெனவே ஆட்சியில் உள்ள அதிமுக இரண்டு மூன்று அணியாக பிளவுபட்டுக் கிடக்கிறது. இந்த சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, பாஜகவை ஆழமாக காலூன்ற வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் அமித்ஷா.
கேரளாவில் வளரும் பாஜக
கேரளாவில் ஏற்கெனவே செல்வாக்கு பெற தொடங்கி விட்டது பாஜக. அங்கு நடந்த உள்ளாட்சி தேர்தலில் அந்தக் கட்சிக்கு கணிசமான இடங்கள் கிடைத்தன. சட்டசபை தேர்தலில் ஒரு இடத்தை பாஜக பெற்றது. இன்னும் தீவிரம் காட்டினால் அந்த மாநிலத்திலும் பெரிய கட்சியாக மாறி விடலாம் என்று பாஜக கருதுகிறது.
ஆந்திராவில் தனித்து வளர முடிவு
ஆந்திராவில் ஆளும் கட்சியாக உள்ள தெலுங்குதேசம் பாஜக கூட்டணியில் தான் உள்ளது. இருந்தாலும் தனியாக அங்கு கட்சியை வளர்க்கும் திட்டங்களை ஏற்கெனவே பாஜக உருவாக்கி விட்டது. அதே போல்தான் தெலுங்கானாவிலும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.