மொத்தம் 3 சீட்.. ஆளுக்கு ஒன்று கேட்கும் வாசன், தேமுதிக.. நெருக்கும் பாஜக.. விழிக்கும் அதிமுக!
சென்னை: வரும் ஏப்ரல் மாதம் தமிழகத்தில் 6 ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைவதால் இப்போதே அந்தப் பதவியை கைப்பற்ற திமுக-அதிமுக ஆகிய இரு கட்சிகளிலும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
திமுகவுக்கு 3, அதிமுகவுக்கு 3 என்ற வீதத்தில் இந்த முறை ராஜ்யசபா உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அதிமுகவுக்கு 3 இடங்களில் ஒன்றை தேமுதிக கேட்டு வரும் நிலையில் மற்றொரு இடத்தை ஜி.கே.வாசன் கேட்டிருக்கிறார். ஆனால், அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை சட்டமன்ற தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம் என ஏற்கனவே அதிமுக தலைமை அவரிடம் கைவிரித்ததாம். மனம் தளர்ந்து போன அவர் இது தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவரும், தனக்கு மிகவும் நெருக்கமானவருமான பிரணாப்பிடம் இது பற்றி தெரிவித்துள்ளார்.
ஜி.கே.வாசன் மீது இதுவரை எந்த ஊழல் குற்றச்சாட்டும் இடம்பெறாததாலும், முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பாஜகவை சேர்ந்தவர்களுக்கு பெரியளவில் எந்த குடைச்சலும் கொடுக்காததாலும் அவர் மீது அமித்ஷாவுக்கும், மோடிக்கும் நன்மதிப்பு உண்டு. அதன் அடிப்படையில் தான் ஜி.கே.வாசனை எப்போது எனது வீட்டிற்கு வருகிறீர்கள் என சென்னை விமான நிலையத்தில் மோடி உரிமையுடன் அழைத்தார். அதன் பின்னர் டெல்லி சென்ற வாசன், அமித்ஷா, மோடி ஆகியோரை சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் பற்றி விரிவாக பேசிவிட்டு வந்தார்.
இந்நிலையில் வாசனை பாஜகவில் இணையுமாறு அக்கட்சியின் தலைமை அழைப்பு விடுத்து காத்திருக்கிறது. அவரோ தயக்கம் காட்டிவருகிறார். இதனிடையே ஜி.கே.வாசனை ராஜ்யசபா உறுப்பினராக கொண்டு வர விரும்புகிறதாம் பாஜக. அதற்கு ஏற்றார்போல் தமிழகத்தில் வரும் ஏப்ரலில் 3 ராஜயசபா சீட்கள் அதிமுகவுக்கு கிடைக்கும் என்பதால் அதில் ஒன்றை வாசனுக்கு கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாம். ஆனால், இந்த விவகாரத்தில் அதிமுக இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லையாம். பிரேமலதா, வாசன், போன்றோருக்கு ராஜ்யசபா சீட் கொடுத்தால் அதிமுக தொண்டர்கள் தலைமை மீது அதிருப்தி கொள்வார்கள் என்ற தகவலும் முதல்வருக்கு கிடைத்துள்ளது.
இதனால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ். ஆகியோர் இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிக்கின்றனர். சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து ராஜ்யசபா சீட் விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது அதிமுக.