தமிழீழத்துக்கு ஆதரவு இல்லை: பாஜக மீண்டும் திட்டவட்டம்- 'மிஸ்டர் வைகோ' கேக்குதா?
கோவை: இலங்கை தமிழர் உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை எடுப்போம், ஆனால் தமிழீழ கோரிக்கையை பாஜக ஆதரிக்காது என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவரான வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
தேர்தல் பிரசாரத்துக்காக, நேற்று கோவை வந்திருந்த அவர், அளித்துள்ள பேட்டி:
குஜராத்தின் வளர்ச்சி போன்று, இந்தியாவையே மாற்றிக்காட்டுவோம் என்கிறார் மோடி. ஆனால், கடந்த மூன்றாண்டுகளாக, இங்கு அ.தி.மு.க., அரசு என்ன செய்தது என்பதை தமிழக மக்களுக்கு, சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
நாடாளுமன்ற தேர்தலில் 300க்கும் அதிகமான இடங்களை, கூட்டணிக் கட்சிகளுடன், பா.ஜ., கைப்பற்றும் என்ற நம்பிக்கையுள்ளதால், அதிமுக, திமுக போன்ற கட்சிகளின் ஆதரவை பெற அவசியம் வராது.
பாஜகவில் மூத்த தலைவர்களுக்கு மரியாதை தருவதில்லை என்ற குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை. மூத்த தலைவர்களை மதிக்கிறோம்; அவர்களது வழிகாட்டுதல்படியே நடக்கிறோம்.
பாஜக ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் தடையற்ற மின்சாரம், நதி நீர் இணைப்பு, நல்ல சாலைகளுக்கும், வேளாண்மைக்கும் முக்கியத்துவம் தருவோம். அதன்பின்னர்தான், ராமர் கோவில் கட்டுவதற்கு நடவடிக்கை எடுப்போம்.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பல ஊழல்கள் நடந்துள்ளன. ஒவ்வொரு ஊழலுக்கும், குறிப்பிட்ட காலத்துக்குள், விசாரணை அறிக்கை அளிக்கும் வகையில் கமிஷன் ஏற்படுத்தப்படும்.
அதன் அடிப்படையில் நடவடிக்கை இருக்கும். பாஜக தேர்தல் அறிக்கையில், இலங்கை தமிழர் பிரச்னை, கச்சத்தீவு பிரச்னை போன்ற எந்த வாக்குறுதிகளும் இல்லை என்ற குற்றசாட்டு கூறப்படுகிறது தேசியளவில் தேர்தல் அறிக்கை தயாரித்ததால்,
தேசிய பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளித்தோம். தமிழீழ கோரிக்கையை, பாஜக ஒருபோதும் ஆதரிக்காது.
அதே நேரம் தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கும்.
காவிரி பிரச்னையில் தமிழக நலனை பாஜக புறக்கணிப்பதாக ஜெயலலிதா குற்றம் சாட்டுவதை தமிழக மக்கள் நம்பமாட்டார்கள். இவ்வாறு, வெங்கையா நாயுடு கூறினார்.
வைகோ என்ன சொல்றார்?