காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்.. ஆனால் டைம் சொல்ல முடியாது.. இல.கணேசன்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாக இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
டெல்லி : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாக ராஜ்யசபா எம்பி இல.கணேசன் கூறியுள்ளார். டெல்லியில் அமைச்சர் நிதின் கட்கரியை பாஜகவின் 3 பேர் கொண்ட காவிரிக்குழு சந்தித்தது.
காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்னை தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து, இந்தப் பிரச்னையை சுமூகமாகத் தீர்க்க தமிழக பாஜக சார்பில் 3பேர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் எம்.பி தலைமையில் பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், விவசாயப் பிரிவுத் தலைவர் பொன்.விஜயராகவன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்தக் குழுவினர் இன்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உதவியுடன் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை டெல்லியில் சந்தித்தனர். இந்த சந்திப்பிற்குப் பின்னர் இல.கணேசன் செய்தியாளர்களிடம் பேசிய போது கூறியதாவது : நான் தஞ்சாவூரை சேர்ந்தவன். அப்போதெல்லாம் 3 போகம் விளைந்த பூமியில் தற்போது 1 போகத்திற்கே தண்ணீர் கிடைக்கவில்லை. ஆகவே கிடைத்த தண்ணீரை வைத்து விவசாயம் செய்கிறார்கள்.
காவிரி நீரின் அளவை குறைத்தது சரியல்ல என்று நாங்கள் தீர்ப்பு வந்த அன்றே கூறினோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தவே நாங்கள் டெல்லி வந்தோம். மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உதவியுடன் அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்தோம்.
பாஜகவின் சார்பில் நாங்கள் 3 பேர் கொண்ட குழுவினர் அமைச்சர் நிதின்கட்கரியை சந்தித்தோம். இந்த சந்திப்பு திருப்திகரமாக இருந்தது, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தே தீர வேண்டும் என்று வலியுறுத்தினோம். இந்த விஷயத்தில் மத்திய அரசும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உறுதியாக இருக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பு வருவதற்கு முன்னரே மத்திய அரசு இதற்கான நடவடிக்கைகளை தொடங்கிவிட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் நிச்சயம் அமைக்கப்படும் ஆனால் எந்த காலகட்டத்திற்குள் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. அமைச்சர் நிதின்கட்காரி சொல்வதைச் செய்பவர் எனவே நிச்சயம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்றும் இல. கணேசன் தெரிவித்தார்.